பற்றி எரியும் "தெலுங்கானா" பாவத்தின் சம்பளமா?
Tuesday, December 15, 2009
இந்தியச் செய்திகளில் இப்போதைக்கு அடிக்கடி அடிபடும் பெயர். அனேகமாக வாசிக்கும் , வாசித்த அனைவருக்குமே தெலுங்கானா பிரச்சினை பற்றி ஒரளவாவது தெரிந்திருக்கும். அதனால் அதுபற்றி மேலே பேசவேண்டியதில்லை. ஆனால் , அப் பிரச்சினை குறித்த நமது பார்வையை பதிவு செய்தல் தேவை என்ற வகையில் இப்பதிவு.
நாம் “ ஜன கன மண “ பாடும் போதும் , ஆகஸ்டு 15 அன்று கொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் போதும் , ஜனவரி 26 அன்று சட்டையில் கொடியைக் குத்திக்கொள்ளும் போதும் மட்டுமே நம்முள் மிச்சமிருக்கும் “ இந்திய தேசியம் ” எவ்வளவு பலவீனமாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதையும் , இந்திய நடுவண் அரசானது மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது என்பது எப்போதுமே இருந்ததில்லை என்பதையும் செருப்பால் அடித்த மாதிரி இந்தியர்களுக்கு உணர்த்திய பிரச்சினை இந்த தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை.
மக்கள் தனிமாநிலம் கேட்க அடிப்படைக் காரணம் தான் என்ன?
மக்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லாமை. அந்த நம்பிக்கை இல்லாமை தான் ஹைதராபாத் மாகாணத்தை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக மாற்றும் போதே பிரச்சினையைக் கிளப்பியிருந்தது. அந்தச் சூழலில் , கிடைத்த 40 ஆண்டுகளைக் கொண்டு ஒருங்கிணைந்த ஆந்திர அரசும் , இந்திய நடுவண் அரசும் ஏன் இரு தரப்பு மக்களை ஒற்றுமையில் நம்பிக்கை கொள்ள வைக்க முடியவில்லை என்பதை அலசுவதன் மூலம் மட்டுமே இனிவரும் காலங்களில் எழும் இது போன்ற பிரச்சினைகளுக்கான ஆணி வேரை அகற்ற இயலும்.
ஆனால் , எப்போதும் பிரச்சினைகளின் பின்னால் மட்டும் ஓடிக்களைக்கும் நமது கொள்கை வகுப்பாளர்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை. நமது துரதிஷ்டம் நமக்கு வாய்த்த தலைவர்களில் யாருமே தீர்க்கமான , தைரியமான முடிவெடுப்பவராகவோ அல்லது குறைந்தபட்சம் நன்கு யோசித்து இருதரப்பையும் கலந்து பேசி முடிவெடுப்பவர்களாக இல்லை.
நேற்றைக்கு தெலுங்குதேசமும் ,காங்கிரசும் தெலுங்கானாவை ஆதரித்த போது “நாங்கள் எலக்சனில் நிற்கமாட்டோம்…!” என்று போர்க்கொடி தூக்கியிருக்காத எம்.எல்.ஏக்களும் , எம்.பிக்களையும் இன்று பதிவியைத் தூக்கி எறிவதாகச் சொல்லுவதெல்லாம் இன்னமும் இப்பிரச்சினையைக் கிளப்பி எவ்வளவு தூரம் அரசியல் வாதிகள் குளீர் காய நினைக்கிறார்கள் என்பதைப் புலனாக்குகிறது.
முதலில் பிராந்தியக் கட்சிகளாக உருவாக்கம் பெற்ற இப்பிரிவினைவாதம் இன்று தனித்தனி மாநிலங்களுக்கான கோரிக்கையாக மாற்றம் பெற்றிரூக்கிறது. ஆனால் இப்பிரிவினைவாதத்திற்கான மூல காரணம் இந்திய தேசியத்திற்குள்ளேயே ஒளிந்து கிடக்கிறது.சேர்ந்து வாழ்வதற்கான வலுவான காரணிகள் இருந்தாலும் , மக்கள் பிரிந்து கிடப்பதையே விரும்பும் அரசியலவாதிகள் தாம் நம் வழிநடத்துனர்கள் என்பதை புரிவோமானால் பிரிவினைவாதம் எங்கிருந்து துவங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.!
அடக்கப்பட்ட ஒரு சமூகத்தின் , ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரிவினைக்கோஷம் அல்ல “தெலுங்கானா” என்பது……….தமது பிரதேசத்து நலன்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்ற சுயநலத்தால் இங்கே அரசியல்வாதிகள் மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்……அதே சுயநலனை மையமாக வைத்தே கடலோர மற்றும் ராயலசீமா அரசியல்வாதிகளும் விளையாடுகிறார்கள்……
அதே வேளை , தெலுங்கானா என்பது ஒரு தனிப் பிரதேசம்…!
சுயநலமாகவே இருப்பினும் , தெலுங்கானா எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தெலுங்கானா மக்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். ஆனால் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தெலுங்கானாவைப் பிரிக்க மாட்டோம் என்று சொல்வதோ மக்களை மதிக்காத செயல். மக்களின் முடிவை மதிக்காத ஒரு அரசை எப்படி மக்களின் அரசு என்று சொல்லமுடியும்?
மக்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவுங் கூட இந்திய தேசியத்திற்கு இயலாதபோது , தனித்தனித் தீவுகளாய்க் கிடக்கும் பல்லின சமூகமான இந்தியாவை ஒன்றுபடுத்தி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல இயலுமா என்று எதிர்பார்த்திருப்பது வீண் வேலை என்பதே இங்கு தெளிவாகிறது. அத்தகைய முடிவையே மக்கள் எடுத்திருக்கிறார்கள்.
ஆகவே, தத்தமது பகுதிகளை வளப்படுத்த தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அரசாங்கமே தேவை என்ற முடிவிற்கே மக்களை இந்த இந்திய தேசியமானது தள்ளி விடுகிறது. ஒருமைப் பட்ட ஒற்றை இந்தியாவிற்குள் பற்பல அதிகாரமற்ற மாகாணங்கள் என்று புறந்தள்ளிவிட இயலாத அளவிற்கு மக்களிடையே பரஸ்பரம் பகை உணர்வு மெலிந்து கிடக்கிறது. அவர்களை ஒன்று சேர்க்கும் புறக்காரணிகள் என்று எதுவுமே இல்லை.
அதனால் தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் , அண்டை மாநிலத்துக்கும் இடையே பிரச்சினைகள் என்று வருகிற போது ஓட்டுக்களை மட்டுமே கணக்குப் போட்டு இந்திய நடுவண் அரசும் வாளாவிருக்கிறது.
அப்படி , எதையுமே தொலைநோக்காக பார்க்காமல் பிரச்சினைகளை தள்ளிப்போட்டு சமாளிப்பதையே வழக்கமாக்கிக்கொண்டிருக்கும் இந்திய தேசியத்திற்கு காலம் அடித்த எச்சரிக்கை மணி இந்த தெலுங்கானா.
ஒடுக்கப்பட்ட தேசிய இனமான ஈழத்தமிழினத்தை கொடுங்கோலர்கள் கொன்றொழித்த செயலுக்கு இந்திய தேசியம் உதவிய பாவத்திற்கான சம்பளமாகவே இந்நிகழ்வைப் பார்ப்பதில் தவறில்லை என்பேன் நான்….!

'‘.