தமிழர்கள் அறிவிலிகளா?

Tuesday, June 30, 2009

இது ஒரு மீள்பதிவு.....! சிறு சிறு மாற்றங்களுடன்...! இந்த மீள் பதிவிற்குக் காரணம் , அரசியல் ஆசையில் லேட்டஸ்டாக ஒரு வெள்ளித் திரை நடிகர் பிரசன்னமாகிறார்.

தொடர்புபட்ட செய்திக்கு

மிகுந்ததொரு அலசலுக்கு பின்பே இத்தகையதோர் பதிவினை எழுதத்தலைப்பட்டோம்.......

ஏன்...?

மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளையும் , அதற்குரிய செய்லகளையும் ஆராய்வதை விட்டுவிட்டு மக்களை முட்டாள்கள் என்று வெறுமனே குற்றம் சாட்டிவிட்டு தப்பிக்க பார்க்கிறோமோ என்ற உள்ளுணர்வே காரணம்.

சித்தாந்தங்களுக்கும், உயரிய கொள்கைகளுக்கும் , தகுதியான தலைவர்களுக்கும் பஞ்சமான இந்த தமிழ்நாட்டில் கொள்கை பற்றி தெரியாத அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை..............சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் நடத்தும் அரசியல் நடிகர்களுக்கும் பஞ்சமில்லை...........


அண்ணா தொடங்கி , கலைஞர் கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜெயல்லிதா வரை சற்றேறக்குறைய அரை நூற்றாண்டு காலம் நம்மை சினிமா துறையினர் ஆண்ட பிறகும் இன்றைக்கும் விஜயகாந்த் , சரத்குமார் பின்னால் அணி வகுத்து நிற்கும் தமிழனை முட்டாள் என்றழைப்பதில் தவறென்ன............???

இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் ( ஆந்திரா தவிர்த்து ...) ஒரு சினிமா நடிகன் நாடாள முடியும் என்று சொன்னால் வாயில் மட்டும் சிரிக்க மாட்டார்கள்.....


சினிமா துறையினர் அரசியலுக்கு வருவதில் தவறொன்றுமில்லைதான் ...எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்போமானால் யாரும் இங்கே அரசியலுக்கு வரவும் நாடாளவும் தடையில்லைதான்....
ஆகவே அரசியலுக்கு வரும் அவர்களை நான் குற்றம் சொல்லவும் மாட்டேன்......குற்றம் சொல்வதும் தவறு.....


ஆனால் சினிமாவில் அன்றாடம் அக்கிரமக்காரர்களை அழிக்கும் ஒருவன் அரசியலிலும் அவ்வாறே செய்வான் என்றெண்ணும் மக்கள்தான் முட்டாள்கள்!!! சினிமா வேறு , நிதர்சன்ம் வேறு என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் இந்த மக்கள்....???

பாடல்களால் மட்டுமே புகழடைந்த ஒரு முதல்வர் , ஆடல்களினாலேயே புகழ்பெற்ற ஒரு முதல்வர் , இப்போது அதிரடியினாலே யே முதல்வராகத்துடிக்கும் இன்னொருவர் !!(இவர்களின் வரிசையில் அண்ணாவையும் , கலைஞரையும் சேர்க்க முடியாதுதான்........ஆனாலும் அவர்களின் பின்புலம் சினிமாதான் என்பதை மறுக்கவியலாது)!!

ஏன் சிறந்த மக்கள் நலத்திட்டங்களையும் , கொள்கைகளையும் கொண்டுள்ள ஒருவர் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவனாக மாற முடியாதா??? அத்தகைய தலைவர்களுக்குதான் இங்கே பஞ்சமா என்ற கேள்விக்கான பதில் எவரிடத்துமில்லை!


நிற்க ......

ஏன் சினிமாவிலிருந்து வந்த தலைவர்கள் நாடாள்வதில் என்ன தவறு என்பதை ஆராய்வதை விட பொத்தாம் பொதுவில் நான் அதைச்செய்வேன் , இதைச்செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளிவிடுவோரை நம்பி மோசம் போவதே பிழைப்பாகிப்போனது.......

இப்படித்தான் , நேற்று ஒருவர் "சாதி - மதம்" அற்ற சமுதாயத்தை நான் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவேன் என்றார்......

அரசியலில் அவர் சாதி மதம் போக்க , என்ன இதுவரை செய்துள்ளார் அல்லது ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன செய்து சாதி - மதமற்ற சமுதாயம் ஆக்கப்போகிறார் என்ற கேள்வியை வைப்பது பொருத்தமே......அதற்கான பதில் கிடைக்குமா என்றால் கிடைக்காதென்பதே நிதர்சனம்...காரணம் அவர்களுக்கெல்லாம் மக்கள் தொண்டு செய்வதென்பது முக்கியமல்ல...அது முதல் நோக்கமும் அல்ல..எப்படியாவது இம்மாநிலத்தின் முதல் பதவியை அடைந்து பதவியில் திளைக்க வேண்டுமென்பதுதான்!!!!

நல்ல தலைவர்களை ஆதரிப்போம்..

தன்னலமில்லாத இளைஞர் படைக்கு நம் ஆதரவுக்கரங்களை நீட்டுவோம்...

ஒவ்வொரு முறையும் நம் வாக்குச்சீட்டில் ஓட்டுக்களை குத்தும்போது எந்தக்கட்சி என்று பாராமல் நல்ல மனிதரா இல்லையா என்பதை மட்டும் பார்த்து வாக்களிப்போம்....

இனியாவது தலைவர்களை வெள்ளித்திரையில் தேடாமல் விவேகத்துடன் சிந்தித்து நல்ல மனிதர்களையும் , நல்ல சித்தாந்தங்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்களா நமது மக்கள்.....??

இதுவே வருங்கால தமிழ் சந்ததியினருக்கு விட்டுச்செல்லப்போகும் நல்லதொரு ஆரம்பம்!!!!!!!!

இல்லாவிட்டால் , தமிழகத்தின் கையாலாகத்தனத்தை வைத்து ஒன்றுமே செய்யவியலாத பல "முத்துக்குமார்"கள் தீக்குளிப்பார்கள்.

Read more...

வீரத்தின் விளைநிலம் வன்னி(தோல்விக்குப் பயந்தவன் அடிமை) – பகுதி 3

Sunday, June 28, 2009


வீரத்தின் விளைநிலம் வன்னி என்ற இந்தக் கட்டுரைத்தொடர் தமிழகத் தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளுடன் நிறைவுறுகிறது.


முதல் பகுதிக்கு இங்கே க்ளிக்கவும்.

இரண்டாம் பகுதிக்கு இங்கே க்ளிக்கவும்.


பிரபாகரன் என்ற பெயர் ஒரு சகாப்தம்…

பிரபாகரன் என்ற பெயர் ஒரு வரலாறு…

பிரபாகரன் என்ற பெயர் ஒரு சரித்திரம்…

பிரபாகரன் என்ற பெயர் தமிழனின் மூச்சு….

பிரபாகரன் என்ற பெயர் தமிழனின் ஆன்மா…

பிரபாகரன் என்ற பெயர் தமிழன்னையின் சொத்து…..

பிரபாகரன் என்ற பெயர் தமிழனின் உயிர்….!


தமிழனின் வரலாற்றை , சரித்திரத்தை , மூச்சை , தமிழன்னையின் சொத்தை , ஆன்மாவை , உயிரை முடமாக்கியே விட்டோம் என்கிறான் எதிரி. அந்த சகாப்தம் வாழ்ந்த போது வசை பாடிய அனேக மாற்றரசியல் வியாதிகள் அவன் மறைந்த பிறகு மெளனித்துப் போனார்கள். எதிரி எம்மை வென்று விட்டான் , தலைமையை அழித்து விட்டான் என்று அடங்கிப் போவதா நாம் அந்த வீர மறவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி?


இதுவரை ஈழக்கனவுக்காக இழந்தது சில லட்சம் தமிழ் உயிர்கள். அந்த உயிர்களுக்காகவா கண்ணீர் அஞ்சலி? வெறும் கண்ணீர் அஞ்சலி மட்டும் போதுமா அந்த மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய? அந்த மாவீரர் கூட்டம் விட்டுச் சென்ற உணர்வும் , உணர்ச்சியும் இல்லாமலே போய் விட வேண்டுமா?


ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அப்போராட்டத்திற்கான காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. போராட்டம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். எதிரி தமிழனுக்காக உரிமையைக் கொடுத்து போராட்டத்தை வென்றிருக்கவில்லை. மாறாக , தமிழனின் உரிமையை , வாழ்வாதாரத்தை சிதைத்து , தன்மானத்தை முடக்கி , கெளரவத்தை அவமதித்து , சுயமரியாதையை தூக்கிப் போட்டல்லவா போராட்டத்தை முடக்கிப் போட்டான்?


அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்வது என்பது அடிமை வாழ்வினை ஏற்றுக்கொள்வதாகாதா? அதையா நமது தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது? அதையா நமது வரலாறு செதுக்கி விட்டுப் போக வேண்டும்? சிங்களனுக்கு அடிமையாக தமிழன் மாறின 21ம் நூற்றாண்டு என்றா வரலாற்றின் பக்கங்கள் புரட்டப் பட வேண்டும்?


தமிழகத்
தமிழர்களேசிந்தியுங்கள்…!



இப்போது ஈழத்தமிழினம் ஓய்ந்து போயிருக்கலாம். கொஞ்சம் தம்மை போராட்டக்களத்திலிருந்து விலக்கி வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களின் அழிவுக்குக் கணிசமான பங்கு வகித்த தமிழகத்துத் தமிழர்கள் அந்த அவமானத்துக்கு மருந்தாவது போட வேண்டும்….! ஆயுதப் போராட்டம் தோற்றுப் போயிருக்கலாம். களம் நம் கையை விட்டுப் போயிருக்கலாம். ஆனால் போர் முடியவில்லை.


அது அமைதி வழியில் தொடரத்தான் போகிறது. அத்தகைய போராட்டத்தின் ஆதார சுருதியாக நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழக சட்டமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்ற முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டும்… நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நமது தமிழக மண்ணில் இருந்தே நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற இந்திய வல்லரசை நோக்கி நமது உரிமைக்குரல்கள் நீள வேண்டும்….!


அத்தகையதொரு போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதில்வெற்றி கண்டு அந்த வெற்றியை போராடி மடிந்த போராளிகளுக்கு அஞ்சலியாகச் செலுத்துவோம்…வெறும் கண்ணீர் அஞ்சலிகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டு , தோல்வியின் அவமானம் தந்த வெறியினைக் களத்தில் காட்டி நாடு கடந்த தமீழீழ அரசாங்கத்தினை பாரதம் அங்கீகரிக்கச் செய்வதே , அத்தகைய அரசாங்கத்திற்கான தார்மீக ஆதரவையும் வழங்குவதே தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமை.


தலாய் லாமாவின் நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தை அங்கீகரித்து அதை இங்கே செயல்பட வைத்திருக்கும் இந்தியாவால் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு தடை சொல்ல என்ன காரணம் இருக்க முடியும்? திபெத்திய ஏதிலிகளும் இங்கே இருக்கிறார்கள்………ஈழத்து ஏதிலிகளும் இங்கே இருக்கிறார்கள்….!


Read more...

வீரத்தின் விளைநிலம் வன்னி(வசவுகளால் அர்ச்சிக்கப்பட்ட மாவீரன்) – பகுதி 2

Friday, June 26, 2009


இந்தக் கட்டுரை வீரத்தின் விளைநிலம் வன்னி என்ற தொடர்க்கட்டுரையின் இரண்டாவது பகுதி. முதல் பகுதிக்கு இங்கே க்ளிக்கவும்.!



அம்மாவீரன் மேல்தான் எத்தனை வசவுகள்? எத்தனை யெத்தனை பொய்ப் புகார்கள்???


பிள்ளைகளை தூர தேசத்தில் பொத்திப்பொத்தி வளர்க்கிறான் என்றார்கள்…….இன்று தனது மகன் சார்லஸ் ஆண்டனியையும் கூட களத்தில் இழந்து விட்டதாய் சொல்கிறது சிங்களம். அதன் மூலம் அதற்கும் பதில் சொல்லிவிட்டான். இப்போது சொல்லுங்கள்….எது உண்மையென்று? சிங்களமா இல்லை எமது வீர மறவனா?


அரக்குமாளிகையில் அவன் , சயனைடு குப்பிகளுடன் அப்பாவி இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று புழுகியது சிங்களமும் , துரோகக் கூட்டமும்…! இன்றைக்கு திறந்தவெளிச் சிறைகளில் தமிழ் மக்கள் படும் அவலங்களைக் கண்டால் அவன் தீர்க்கதரிசி என்பது புரியும். அவன் எதற்காகப் போராடினான் என்பது புரியும்….! அவன் அரக்குமாளிகையில் வாழ்ந்தானா இல்லை மக்களோடு மக்களாக போராடினானா என்பதையும் நந்திக்கடல் சொல்லியிருக்கும் துரோகக் கூட்டத்திற்கு.


மக்களைச் சிறைப் பிடித்து மனிதக் கேடயமாக்குகிறான் என்றே உலகுக்குச் சொல்லி வந்த சிங்களம் இறுதிவரை புலிகள்தான் எமது பாதுகாப்பு என்று உறுதியாக நின்ற அம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை பதுங்குகுழிகளுக்குள்ளேயே புதைத்துவிட்டு மக்கள் தப்பித்துவிட்டதாக பொய்ப்பிரச்சாரம் பண்ணுகிறது. மக்கள் இறந்த சுவடே உலகுக்கு தெரியாமல் மறைத்து விட்டதாய் இறுமாப்புக்கொள்கிறது. அதற்கு இந்தியாவும் தவறாமல் பக்கமேளம் இசைக்கிறது.


ஆனாலும் , இவை எவற்றிற்குமே பதில் சொல்லிக் கொண்டிராமல் தமிழினத்தை அழிக்க வந்த சிங்களக் காடையர்களை வீழ்த்துவதிலேயே காலம் செலுத்திய தன்னிகரில்லா தமிழ்த்தாயின் தவப் புதல்வன் அவன். பதிலை வாய்வழிச் சொல்லாமல் களமாடி எடுத்துத் தந்தவன் அந்த புலிமறவன். இறுதியில் அவன் மரணமே அவன் மீது வீசப்பட்ட வசவுகளுக்குப் பதிலாக.


இதுகாறும் அவனை நோக்கி கேள்விக்கணைகளை வீசிய துரோகக்கூட்டத்தை நோக்கி எள்ளி நகையாடுகிறாள் தமிழன்னை. வரலாற்றில் எட்டப்பன்கள் வாழ்ந்ததாக தகவலுண்டு. மாவீரர்கள் வீழ்ந்ததாக தகவலுண்டு. ஆனால் , காட்டிக்கொடுக்கிகளூம் , எட்டப்பன்களும் வென்றதாகத் தகவல் இல்லை. வரலாறு வீழ்ச்சியுடன் முடிவதில்லை. அவ்வாறு முடிந்தால் அது சரியாக எழுதப்பட்ட வரலாறும் இல்லை. நாளை வன்னி மண்ணின் ஒவ்வொரு அங்குலமும் அத்துரோகிகளைப் பார்த்து தமது ஏளனத்தைச் செய்து கொண்டே இருக்கும். அந்தப் பரிகாசத்தைப் பார்த்து பொறுத்துக்கொள்ளாமல் வேதனையில் உழல்வார்கள் அவர்கள் வெளியில் சொல்லாவிட்டாலும் கூட.


அவன் துப்பாக்கிகள் தமிழனுக்கு தற்காப்பாக விளங்கிய போது வன்முறைக்கூட்டமிது என்று இகழ்ந்துரைத்தவர்கள் இன்று தமிழன் முகாம்களில் மூகாந்திரம் ஏதுமின்றி அடைபட்டுக் கிடக்கும் போது பேச்சுக்கள் ஏதுமின்றி மூர்ச்சையாகிக் கிடக்கிறார்கள். எதுவும் பேச முடியாது என்று அவர்களுக்கும் தெரியும். நேற்றுவரை அவர்களுக்கும் காவல் காத்த பிரபாகரனின் துப்பாக்கி இன்று மெளனித்திருக்கிறது. அந்த மெளனம் தமிழனின் நிம்மதியான வாழ்வு தேடும் போராட்டத்தை சிதைத்த அத்துரோகக் கூட்டத்தின் பாதுகாப்பான வாழ்விற்கும் வழிகோலப் போவதில்லை என்று இன்று அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.


அரசாங்கம் போடும் ரொட்டித்துண்டுகளுக்காக வாலாட்டிய ஒட்டுக்குழுக்களும் , அவர்களது ஈனத் தலைவர்களும் இனி தான் சாய்க்கும் ஒவ்வொரு தமிழனின் தலைக்கும் இன்னவிலை என்று பேசுவதுதான் பாக்கி…





கிழக்கின் வசந்தம்…! வடக்கின் வாழ்வு…! யாழ் குடாவின் மறுகட்டமைப்பு… என்ற வார்த்தைக்குவியல்களில் உலகை மயக்கி ஒட்டுமொத்த தமிழினத்தையும் வவுனியாவின் திறந்தவெளிச் சிறையில் அடைத்திருக்கிறது சிங்களம்…! அந்த மக்கள் வாழ்வையும் , சாவையும் தமிழீழ விடுதலைக்காக அர்பணித்தவர்கள். இறுதிவரை புலி மறவர்களுடன் தமது இருப்பினை வைத்துக்கொண்டவர்கள்.


எதிரியானவன் , பசி , பட்டினி போன்ற ஆயுதங்களாலும் , விமானங்களாலும் , எறிகணைகளாலும் அவர்களது உறுதியைக் குலைக்க முயன்ற போதும் கூட தளராமல் விடுதலைப் போருக்கு முகம் கொடுத்தவர்கள். இனியும் இழக்க எதுவுமில்லை என்ற போதும் உயிரைக் கொடுத்து போராட்டத்திற்கு உரமூட்டியவர்கள்….!


திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழினம் இன்று திறந்தவெளிச்சிறைகளில்……….


வரப்புக்கட்டக்கூடத் தெரியாத சிங்களனை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் ஆங்கிலேயன் தமிழகத்தமிழர்களை இலங்கைத் தீவின் மலையகத்தில் கொண்டு போய் வைத்தான்….! இன்றும் கூட அவர்கள் ஓட்டுரிமை கூட அற்ற உள்நாட்டு ஏதிலிகளாய்….!


ஏதிலிகளாய் தமிழகம் வந்தடைந்த ஈழத்துச் சொந்தங்களோ எதுவித வசதியுமற்ற அகதிமுகாம்களில் நிரந்தரக் கைதிகளாய்….!


அமைதிப்படையென்ற பேரில் அநியாயமாக எமது சொந்தங்களை யாழ்ப்பாணக் காடுகளில் புதைத்த கொடூர நினைவுகள்…..!


பனைமரக்காடுகள் தாங்கிய வளமான ஈழபூமியய இரத்தக்குளியல்களால் மாசுபடுத்திய சிங்களனின் இரத்த வெறி….!


கையிழந்த , காலிழந்த , விழியிழந்த , மொழியிழந்த , சிந்தனை அற்றுப் போன தமிழர்களால் நிரம்பிக்கிடக்கும் வவுனியா முகாம்களின் கொடுமைகள்….!


மாவிலாற்றில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தமிழுணர்வுடன் தமிழனுக்காகப் போராடி மடிந்த போராளிப் பட்டாளங்கள்…..


எதிரியை தமிழ்மண்ணில் இருந்து அகற்ற தன்னையே ஆயுதமாக்கி மடிந்து போன கரும்புலிக் கூட்டங்கள்….


கடைசி மூச்சிலும் கூட எதிரியை சுட்டு விழ்த்தி மடிந்த தமிழ்த்தாயின் பிள்ளைகள்…..!


நீர்மூழ்கிகளாலும் , பீரங்கிப்படகுகளாலும் சிங்களத்தின் திமிருக்கு சிதை மூட்டிய கடற்புலிக் கூட்டங்கள்…..!


வானேறி இந்தியாவின் சீனத்தின் கண்களில் மண் தூவி கொழும்பு வரை சென்று தற்கொலைப் படையாகி மரணித்த வான்படை போராளிகள்…..!


காடு மலை தாண்டி பயணித்து களம் கண்ட எம் தமிழினத்தின் வீரத் தமிழச்சிகள்…..!


புறநானூறு கூட பதிவு செய்திராத வீரத்தின் சாட்சியென நாம் வாழும் காலத்தில் எம் கண் முன்னே விசுவரூபம் எடுத்து நிற்கும் எமது போராளிகள்…..!


யாழ் , வன்னி , மட்டக்களப்பு ,மன்னார் , வவுனியா , முல்லைத்தீவ், ஆனையிறவு, பூநகரி , அம்பாறை என்று நீளும் களங்களில் எல்லாம் அணிலென போருக்கு உதவி மலையெனத் துன்பம் வந்த போதும் அஞ்சாத தமிழினம்……..


வெந்ததைத் தின்று விதிவந்தால் போவோம் , எதற்கு இந்த உரிமை என்ற வெட்டிப் பேச்சுக்களில் திளைத்திருந்த தமிழ்க் கூட்டத்திற்கு நேர்மாறாக போராட்டக் களம் கட்ட தமிழ்ச் சொந்தங்கள்….


இப்படியாக ஈழத்தின் , வன்னி மண்ணின் வீரவரலாறு நீள்கிறது. அந்த வீர வரலாற்றின் ஒவ்வொரு கரும்பக்கங்களிலும் பாரதத்தின் பங்கு இருக்கிறது. ஆறு கோடித் தமிழர்களை அங்கமெனக் கொண்ட இந்தியாவின் கைகளில் ஈழத்தானின் இரத்தம் மறையாத கறையாக மின்னிக்கொண்டிருக்கிறது. ஆம்….வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வன்னிமண்ணை வீழ்த்திய துரோகத்தின் பெரும்பங்கு பாரதத்தின் பால்தான் இருக்கிறது. அந்த இரத்தக் கறை தமிழகத்துத் தமிழனின் கையாலாகத்தனத்தை எண்ணி எண்ணி நகைக்கிறது.


எனது இனத்தின் இறுதி மூச்சு அடக்கப்படும் வரை வாளாவிருந்த துரோக வரலாற்றை சரித்திரம் கூட வெட்கப்பட்டு பதிவு செய்ய மறுக்கிறது. அந்தப் பாரதத்தின் அங்கமான தமிழகத்து சுயநலக் கார தலைமைகள் வெட்கத்தினால் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனாலும் சுயநலமும் , பதவியாசையும் , தன்னலமும் அவர்களை இன்னமும் இந்தியாவுக்கு சாமரம் வீசச் செய்து கொண்டு இருக்கிறது.


மேனன்களாலும் , நாராயணன்களாலும் நிரம்பி வழிந்த இந்தியாவின் அதிகார வர்க்கம் ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு அதிகாரப் பசியில் போராளிகளின் உயிரைக் குடித்தது. அந்த அதிகார வர்க்கத்தின் குடுமி பிடித்துக் கேள்வி கேட்க வேண்டிய சூழலில் நாம் கெஞ்சிக் கொண்டிருந்தோம்.


அதனால் ஈழக்கனவினை சிதைத்ததில் இந்தியாவின் பங்கு உண்டு அதிலும் ஏகக் கணிசமான பங்கு தமிழகத்தின் கைகளில் உண்டு….!


வீரத்தின் விளைநிலம் வன்னி பகுதி – 3 ( தோல்விக்கு பயப்பவர்கள் அடிமைகள்!) ல் சந்திப்போம்.


(தொடரும்)

Read more...

வீரத்தின் விளைநிலம் வன்னி - நெஞ்சுரத்தை ஆயுதமாக்கிய புலிப்படை(பகுதி 1)

Wednesday, June 24, 2009

வன்னி மண்ணின் இறுதிக்கட்ட போராட்டம் பற்றி நிறைய பேர் எழுதுகிறார்கள். புலிப் போர்வீரர்களின் பாரிய போராட்டம் பற்றியும் , தலைவர் பிரபாகரன் பற்றியும் சில பத்திகளிலோ , சில பக்கங்களிலோ எழுதிவிட முடியாது..ஆனால் வன்னி மண்ணின் கடைசிக் கட்டம் உலகத் தமிழனுக்கு என்ன சொல்கிறது என்று தமிழன் விளங்கிக்கொள்வது நலம்..!

அதற்கான சிறு முயற்சியாக இந்த "வீரத்தின் விளைநிலை வன்னி". ஒரே கட்டுரையாக வந்திருக்க வேண்டிய இந்தக் கட்டுரையின் நீளம் கருதி சிலபாகங்களாக வெளியிடப் படும் அடுத்தடுத்த நாட்களில்.

நெஞ்சுரத்தை ஆயுதமாக்கிய புலிப்படை.!

ஷெல்கள் கிளப்பிய புழுதி முள்ளிவாய்க்கால் எங்கும்….!

துப்பாக்கிக்குண்டுளாலும் , பீரங்கிகளாலும் , எறிகணைகளாலும் காயப்பட்ட தமிழரின் இரத்தம் அந்த யுத்த சூனிய வலயத்தில் எங்கும் நிரம்பியிருக்கிறது. பெயர் மட்டுமே யுத்த சூனிய வலயம். ஆனால் யுத்தமே அங்குதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழரின் பூமியை காவு கொண்டே ஆக வேண்டும் என்ற இருமாப்புடன் உலகத்தின் ஒட்டுமொத்த ஆதரவுடன் லட்சக்கணக்கான சிங்களப்படையினர் ஒருபுறம். எவருடைய ஆதரவுமின்றி , யாருடைய அரவணைப்புமின்றி தமிழர்களின் விடுதலை வேட்கையையும், அவர்களது அர்ப்பணிப்பையும் மட்டுமே முதலீடாக்கி உரிமைக்குப் போராடும் தமிழினம் இன்னொரு புறம்.


அந்த வீரமறவர்கள் தங்களால் இயன்றவரை உலகத்தின் முற்றுகையை எதிர்த்துப் போராடினார்கள். தங்களது துப்பாக்கிகளில் இருக்கும் கடைசிக்குண்டு தீரும்வரை எதிரியைச் சுட்டு வீழ்த்தீனார்கள். எதிரியின் நெருப்பினைக் கக்கும் எறிகணைகளை நெஞ்சுரம் மட்டுமே கொண்டு எதிர்த்தது புலிப்படை..


தமிழ் மக்கள் இறுதிவரை , இறுதி நிமிடம் வரை புலிமறவர்களோடு மறவர்களாக நின்றார்கள். அடைந்தால் தமிழ் ஈழம் இல்லையேல் வீரச்சாவு இது தவிர எமக்கு எதுவும் வேண்டாம் என்ற புலிகளின் குரலுடன் ஒத்துக் காத்திருந்தார்கள்.

சிலநூறு புலி மாவீரர்கள் எப்படி பல்லாயிரம் , பல லட்சம் மக்களைப் பிடித்து வைத்திருக்க முடியும் என்ற சிறு உண்மையைக் கூட புரிந்து கொள்ள மறுத்த இந்த முட்டாள்களின் உலகம் இந்தியாவும் , இலங்கையும் சொன்ன மனிதக் கேடயத்தையே உண்மையெனச் சொன்னன. அவர்களுக்கும் தெரியும் , ஆனால் நீங்கள் இலங்கையில் செவிடாகத் தான் இருக்கவேண்டுமெனச் சொன்னது உலக வல்லரசுகளாக மாறப் போகின்ற இந்தியாவும் , சீனாவும்.


வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற முதுமொழிக்கேற்ப இந்தியாவின் சந்தையையும் , சீனாவின் சந்தையையும் மனதிற் கொண்ட மேற்குலகம் தங்களுக்கு விதிக்கப்பட்ட எல்லைக்கோடுகளுக்குள் நின்று கொண்டு அமைதி , அமைதி என்று வெறும் வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருந்தன.


சாவி இங்கிருக்க மேற்குலகம் வன்னி மண்ணைக் காத்திட வேண்டுமாய் உலகத் தமிழ் மக்கள் ஒரு குரலில் கதறிய அழுகுரல் விண்ணை எட்டினாலும் சிங்களத்தின் / இந்தியாவின் காதுகளை எட்டாதபடியால் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.


இந்து மகா சமுத்திரம் ஒருபுறம் , நந்திக்கடல் மற்றொருபுறம். முள்ளிவாய்க்கால் என்னும் சிறு கடற்கரையின் ஓரத்தில் மக்களோடு மக்களாய் , போராடும் புலிகளோடு புலிகளாய் இறுதிவரை இருந்திருக்கிறான் அந்த மாவீரன்.



சமுத்திரத்தின் ஆழம் தாண்டிய சிந்தனைகளுடன் அவன். துரோகம் கொன்று துரோகம் வென்று களைத்த அவனது நெஞ்சம் இன்றைய பாரிய துரோகத்தையும் கண்டு சளைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறது. தமிழ் இன வரலாற்றின் அழியாப் புகழ் பெறப் போகும் அந்த தன்னிகரில்லாத் தலைவன் மரணத்தின் வாசத்திலும் சளைக்காமல் போர் புரிந்திருக்கின்றான்.



இந்தியப் பேரரசைக் கூட வென்றிருக்கிறான் அவன்…..! ஆனையிறவை அவன் வென்ற விதம் கண்டு அமெரிக்க வல்லரசு கூட திகைத்துப் போனதாம். அந்த வன்னி மண்ணின் வரலாறு சொல்கிறது. அமைதிப்படை என்ற பெயரில் சென்ற சிங்களக் கூலிப்படையை சிங்கமென எதிர்த்தவன் அவன்..!


எதிரிகளின் எண்ணிக்கையை விஞ்சிய துரோகக் கூட்டங்களுடன் கழிகிறது அவனது போராட்ட வாழ்க்கை. ஒருநாளும் எதிரிக்கு அடிபணிய மாட்டேன் என்ற ஒரே நெஞ்சுறுதியுடன் அவன் மட்டும் தனித்துத் தெரிகிறான். வீரப் புலியாகி எதிரிகளுக்கு கிலியைக் கொடுக்கிறான்.

யார் அவன்?

பெயர் சொல்லித் தான் தெரிய வேண்டுமா அந்தத் தமிழ்த்தாயின் தவப்புதல்வனை?

வீரத்தின் விளைநிலம் வன்னி (வசவுகளால் அர்ச்சிக்கப்பட்ட மாவீரன்) பகுதி 2 ல் மீண்டும் சந்திப்போம்.!

(தொடரும் )

Read more...

கள்ளுக்குத் தடை.....நியாயமா? பின்புலம் என்ன?

Monday, June 22, 2009

கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் பொள்ளாச்சி , உடுமலை மண்டலங்களிலும் பதநீர் என்பது சிறுவர்கள் கூட அருந்தும் பானம் பதநீர்.....

அந்தப் பதநீரைப் புளிக்க வைத்தால் அதுவே கள்.

கள் ...இயற்கையின் கொடை..........மருத்துவ குணம் மிக்கது......!

அத்தகைய கள்ளைச் சுற்றி நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் ஒரு அரசானது தம் மக்களை விட்டு எவ்வளவு தூரம் விலகிப் போகிறது என்பதைக் காட்டும் காலக்கண்ணாடி...

அத்தகைய கள் இறக்குவதைப் பற்றியதொரு சுவையான ஒரு விவாதம் நேற்று செயா தொலைக்காட்சியின் "கேள்விக்கணை" நிகழ்ச்சியில் இடம் பெற்றது...( அதில் உள்ள அரசியல்களைப் பற்றி நாம் இங்கே பேசப் போவதில்லை)

அந்த விவாதத்தில் பங்கு பெற்ற மருத்துவர் உஷாராணி தெரிவித்த கருத்துக்கள் சுவாரஸ்யமானவை...

அதிலிருந்து சில முத்துக்கள்....!

1. கள் கல்லீரலுக்கு மிகவும் உகந்தது , ஜீரண மண்டலத்திற்கு கிடைத்த அருமருந்து கள்.

2. கள்ளில் இருக்கும் எத்தைல் ஆல்கஹால் வெறும் 4 சதவீதமே...டாஸ்மாக்கில் மதுவில் இருக்கும் 40 - 45 சத ஆல்ஜஹாலைவிட மிகவும் குறைவு.

3. கள்ளுக்கு இணையான பானம் ஒன்று உலகில் உண்டென்றால் அது இளநீரும், தாய்ப்பாலும் தான்.....


இது தவிர்த்து கள் இறக்கும் போராட்டத்தின் விவசாயத் தலைவர் , விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க வல்லது கள் என்றார். அன்றாடம் மரம் ஏறி தேங்காய் பறித்தாலோ , சிரை பிடுங்கினாலோ கிடைக்கும் 100 ரூபாய் வருமானத்தைக் காட்டிலும் கள் இறக்குவதால் பலமடங்கு வருமானம் கூலித் தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்றார்......

அத்துடன் பொருளாதாரத்தில் பின் தங்கிக்கிடக்கும் தென் மாவட்டங்கள் பனை மரங்கள் மிகுந்தது. அதிலிருந்து பனங்கள்ளை இறக்க அரசு அனுமதித்தால் தென்மாவட்டங்களின் பொருளாதார வளம் பெருக வாய்ப்புண்டு....!

இப்படி பல சிறப்புக்களைக் கொண்டுள்ள கள்ளுக்கு மாற்றாக இன்று அரசே விற்றுக்கொண்டிருக்கும் டாஸ்மாக் பானங்கள் முற்றுமுழுதாக உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பது மட்டுமில்லாமல் , டாஸ்மாக் பானங்களின் விலை காரணமாகவே கிராமப் புறங்களில் கள்ளச்சாராயமும் கொடி கட்டிப் பறக்கிறது. மாற்றாக கள்ளுக்கு அனுமதி தந்தால் கள்ளச்சாராயம் ஒழிக்கவும் வழி பிறக்கும்..



சரி , பலவாறான நன்மைகளைக் கொண்ட கள்ளுக்கு ஏன் அரசு தடை விதிக்கிறது.?

முதற்காரணம் - டாஸ்மாக் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருமானம்.....

இரண்டாவது - மதுபான நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டுக்கொண்டு அரசியல்வாதிகளுக்கும் , அதிகாரிகளுக்கும் அள்ளிக்கொடுக்கும் லஞ்சம்.....!

ஆனால் , இந்த இரண்டு காரணங்களுமே நியாயமானவையாக இல்லை......

அரசே கள்ளுக்கடைகளை அங்கீகரித்து விற்பனையாகும் கள்ளுக்கு வரி வசூல் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஓரளவு சரிக்கட்டலாம்.......! இன்னொன்று , டாஸ்மாக் மதுபானங்கள் மூலம் அதிக அளவில் செல்வழிக்கும் குடிமகன்கள் கொஞ்சம் குறைவாகச் செலவழிக்கலாம். விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்....!

எல்லா ஆல்கஹால்களினாலும் கெடுதல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மொலாசஸ் என்னும் செயற்கைக் கழிவுகளில் இருந்து கிடைக்கும் ஆல்ஹகால்களால் செய்யப்படும் பிராந்தி , விஸ்கி போன்ற மதுபானங்கள் மருந்தளவுக்குக் கூட மனித உடலுக்கு நன்மை செய்யாதவை....! மாற்றாக கள் உடலுக்கு நல்லது.

தமிழ்நாட்டில் முழு மது விலக்கு இருக்குமானால் கள் இறக்கச் சொல்வது தவறே. ஆனால் இங்கோ அரசாங்கமே முக்குக்கு முக்கு மதுக்கடைகளை திறந்து வைத்து குடிமகன்களை சந்தோஷப்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது , கள்ளுக்கடை திறந்தால் மட்டும் குடிமகன்கள் அதிகமாகக் குடிப்பார்கள் என்பதும் விதண்டா வாதம்....!

கவிஞர் சோழவலசு ஜெயராமின் கள் விருந்தில் இருந்து சில வரிகள்......

கள் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !

கள் குடித்துக் கெட்டாரைக்
கேட்ட துண்டா?
கள் குடித்துச் செத்தாரைப்
பார்த்த துண்டா?

எலும்புறுக்கி நோய் தீரும்
தென்னங் கள்ளால் !
எரிசூட்டு நோய் தீரும
பனையின் கள்ளால் !

அதிகாலைக் கள் கடித்தால்
அச்சம் போகும் !
அந்திக் கள் குடித்தால்
ஆயுள் நீளும் !

தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி அவ்வை
கள்ளை அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !

கடையேழு வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
கள் விருந்து கொடுத்தன்றோ
கௌவரம் செய்தார்கள் !



விவசாயிகள் தான் நாட்டில் முதுகெலும்பு என்று ஏட்டில் மட்டும் எழுதி வைத்தனர்......ஆனால் விவசாயிகளுக்காக எதுவுமே செய்வதில்லை.....


விவசாயத்தை லாபமற்றதாக்கி விவசாயப் பூமிகளை தரிசுகளாகவும் , ரியல் எஸ்டேட் களாகவும் மாற்றிய இந்த அரசுகள் இன்னமும் விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளினால் நியாயமா?

வாருங்கள்....!

கள்ளுக்குத் தடை நீக்க அனைவரும் குரல் கொடுப்போம்!!!!!

Read more...

நடிகர் தீக்குச்சியார் கட்சி ஆரம்பித்த கதை….!(உரையாடல் சிறுகதைப் போட்டி)

Sunday, June 21, 2009

அது செவ்வாய் கிரகத்தின் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தமிழ்ப் பேருலகம்.


அரசியல் ஆசை கொண்டு முதல்வர் நாற்காலியைப் பிடிக்கலாம் என்ற கனவில் வந்த நடிகர்கள் அந்தக் காலம் தொட்டு உண்டு. கும்.கி.யயரில் ஆரம்பித்து பயலலிதா , சுரத்குமார் , மஜயகாந்த் , என்று ஓரளவு அரசியல் ஆசையில் செயித்த நடிகர்களும் உண்டு. பெயரே தெரியாமல் ஓடிப்போன நடிகர்களும் உண்டு. இவர்களுடன் சேர்த்து இன்னும் பல காமெடி பீஸ்களும் உண்டு.


அப்படியான காமெடி பீஸ்களில் ஒருவர்தான் தீக்குச்சியார்….அவர் தமிழ் சினிமாவுக்கு வந்த கதை ரொம்பக் கேட்டுக் கேட்டுப் புளித்த போனதானபடியால் அதை விட்டுவிடுவோம்.! ஆனால் அவர் கட்சி ஆரம்பித்த கதைக்கு அவரது நற்பணி மன்றங்கள் முக்கியமானபடியால் அதிலிருந்து இந்த வரலாற்றுப் பதிவு ஆரம்பிக்கிறது.


வகைதொகையில்லாமல் வந்தவர்களை எல்லாம் வாழ வைக்கும் தமிழ் மக்கள் நடிகர் தீக்குச்சியாரை மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? அவர் வந்து போன ஒன்றிரண்டு படங்கள் சில்வர் ஜூப்ளியாதலால் நடிகர் தீக்குச்சியாருக்கு ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. அந்த ரசிகர் பட்டாளத்தில் ஒருவருக்கு கூட செய்வதற்கு வேலை எதுவும் இல்லை என்பதால் அனுதினமும் தீக்குச்சியாரின் புகழ் பாடுவதே தொழிலாகிப் போனது. அவர் படம் ரிலிஸாகும் தினம் ஒரே தீபாவளிதான்.


அப்பாவிடமும் , அம்மாவிடமும் சண்டை போட்டு பணத்தை வாங்கி வந்து தியேட்டரில் பால் அபிஷேகம் பண்ணுவது . கட் அவுட் கட்டுவது , பேனர் கட்டுவது என்று அன்று முழுக்க கொண்டாட்டமாகத் தான் இருக்கும்…!


இதுக்கு ரெண்டு காரணம் உண்டு……ஒன்று ஓமக்குச்சியாரின் நடிப்பைப் பாராட்டி அவர் பின்னால் அணி திரள்வதில் உள்ள சந்தோஷம். ரெண்டு……பொழுது போகணும்ல?????


இப்படியாக "பொழுது போகணும்ல" என்ற ஐடியா அன்று குமரனுக்கு வந்திருந்தது. குமரன் வீட்டில் மூணாவது பையன்…பிளஸ் டூ படிக்கும் போது 40 வயது கமலா டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்த காரணத்தால் பள்ளியில் இருந்து துரத்தப்பட்டவன்….துண்டு பீடி பொறுக்கிக் குடித்ததால் அப்பா அடிக்கப் போக அப்பாவையே அடித்து விட்டு வீட்டிற்கு அப்பப்ப சாப்பிட மட்டும் போய் வருபவன். ! பெத்த கடனுக்கு சோத்தை மட்டுமே போட்டுவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டிருந்தார்கள் பெற்றவர்கள்.


அப்பப்போ , குமரனுக்கு நண்பர்களின் துணையில் தீர்த்தாபிஷேகமும் உண்டு….நண்பர்களில் அனேகம் பேரும் இந்த "பொழுது போகணும்ல" கோஷ்டிதான்……அன்று முழுவதும் பங்க் கடை தன்ராஜுக்கு சனி தெசைதான். பெஞ்ச்சில உட்கார்ந்து கொண்டு பண்ணும் அழிச்சாட்டியத்தில் எவனும் கடை பக்கம் கூட வரமாட்டான். இப்படியானதொரு வரலாற்றுச் சூழலில் தான் நடிகர் தீக்குச்சியார் "காத்தடிச்சாப் பறந்துடுவேன்" என்ற திரைப்படத்தில் அரை சீனில் அறிமுகமாகி இருந்தார்.


குமரனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டதா தாம் செய்யும் நற்பணிகளுக்கு? பிடித்தான் தீக்குச்சியாரை….!!!!!


அதனால் "பொழுது போகணும்ல" என்ற ஐடியாவில் ஒத்த கருத்து கொண்ட (???) நண்பர்களை கூட்டிக்கொண்டு போய் தீக்குச்சியாரைப் பார்த்தான்.


"அய்யா , உங்க பேர்ல ஒரு நற்பணி மன்றம் ஆரம்பிக்கணும்…!"


தீராத சமூக ஆர்வத்தில் தவித்துக்கொண்டிருந்த தீக்குச்சியாரும் "ஆரம்பிங்கடா ரசிகர் மன்றத்த" ன்னு டிரம்ஸ் கொட்ட ஆரம்பிச்சார்…( முன்னேறணும்ல? அதான் முரசுல இருந்து டிரம்ஸ்…).


இப்படியாகத் தொடங்கியது நடிகர் தீக்குச்சியாரின் சமூகப் பணி…!


இப்படி ஒவ்வொரு ஊர்லயும் இருந்த "பொழுது போகணும்"ல கோஷ்டி தீக்குச்சியாரின் சமூக ஆர்வத்திற்கு தீணி போட்டுக்கொண்டிருந்தது….அ.வ்வப்போது சென்னை போரடிக்கும் போது வெளியூர் போகும் தீக்குச்சியார் இந்த "பொழுது போகணும்"ல கோஷ்டிக்காரங்க ஏற்பாடு செஞ்ச நிகழ்ச்சில அங்கங்கே ஒண்ணு ரெண்டு தையல் மிசினையும் கொடுத்து வெளம்பரம் தேடிக்கிட்டது மட்டுமில்லாம தனது தாளாத சமூக ஆர்வத்தையும் தணிச்சிகிட்டார்..!


குமரனுக்கும் மனத்திருப்தி…


"ஊர்ல ஒருத்தங் கூட நம்மளை சும்மா சுத்திகிட்டு இருக்கேன்னு சொல்லிட முடியாதே…………..நற்பணி மன்றம் நடத்துறோமே? ""


இப்படித்தான் போய்கிட்டு இருந்தது குமரன் அன் கோ மற்றும் தீக்குச்சியாரோட வாழ்க்கை. அப்பப்போ வெளியூரு போற போது வர்ற கூட்டத்த பாத்து தீக்குச்சியாருக்கு அரசியல் ஆசை வேற வந்துடிச்சி…யோசிச்சார்………..மார்க்கெட் வேற டல் ஆயிடுச்சி……ஒன்று ரெண்டு சீன்ல கூப்பிட்டவங்க இப்ப வூட்டுப் பக்கம் எட்டியே பாக்கறதில்லே….


எத்தன நாளாத்தான் நம்மளே காசு போட்டு படம் எடுத்து நடிக்கிறதுன்னு யோசிச்சார்…..யோசிச்ச படியே தீக்குச்சியார் ஆகஸ்டு மாதத்தின் பின்னிரவில் தூங்கிப் போனார்…


"யாருக்காக இந்த நாடு ? நம்ம தமிழ் நாடு? " இப்படி ஒரு முன்னாள் முதல்வர் பாட


"நமக்காக , நடிகர்களுக்காக இந்த நாடு நம்ம தமிழ்நாடு!" இப்படி எதிர்ப்பாட்டு இன்னொரு முன்னாள் முதல்வர் பாடுறாங்க.


பாட்டு முடிஞ்சதும் தலைமைச்செயலகம் , அங்க பார்த்தா கும்.கி.யார் முதலமைச்சர் , பயலலிதா துணை முதலமைச்சர் , மஜயகாந்த் மின்சார அமைச்சர் , நடிகர் குஜய் வேளாண்மை அமைச்சர் , நடிகர் பார்த்திக் பொதுப்பணித்துறை அமைச்சர் , நடிகர் சுரத்குமார் தான் நாட்டாமை – ச்சே , அவுருதான் சட்டப் பேரவை சபாநாயகர் , எஸ்.எஸ் இந்திரன் தான் கொறடா , சப்போலியன் – சட்ட அமைச்சர் , ஜே கே கத்தீஷ்– கலைத்துறை அமைச்சர் இப்படி நீளுது பட்டியல்…


அதில் தீக்குச்சியார் மட்டும் இல்ல……எம்மாம் பெரிய வரலாற்றுத் தவறு அது? ……முழிச்சுப் பார்த்தார்……அட்ச்சே கனவா……காலைல எழுந்ததும் சட்டுப் புட்டுன்னு ஒரு கட்சிய ஆரம்பிச்சிடுறோம்ங்கிற வரலாற்று முடிவை அன்னிக்கு எடுத்தார் தீக்குச்சியார்…


எந்திரிச்சதும் பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணச் சொல்லி மேனேஜர் கிட்ட சொல்லி வுட்டுட்டார்…….!


சாயந்திரம் …………


பிரஸ் மீட்ல ஒரே கூட்டம்…


தம்பதி சகேதமா உக்காந்துகிட்டு இருக்கார் தீக்குச்சியார்.


"எதுக்காக அய்யா இந்த பிரஸ் மீட்டு ? " ஒரு நிருபர் கேக்கிறார்……நக்கலாக…


"வயசு என்னமோ அருபது ஆச்சி , ஆனா போன வாரம் கூட சினிமால யூத்து கட்டினவன் நான்…என்னப்பாத்தா அய்யான்னு சொல்றே நீ? இருஇரு நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்…! அதுக்கப்புறம் ஆட்சிக்கு வந்து உன் வூட்டுக்கு ஆட்டோ அனுப்பறேன்" இது தீக்குச்சியார்…


பின்னாடி சடசடன்னு சத்தம்……….


"என்னய்யா அது சத்தம்? " ஆவேசமாகக் கேட்கிறார் தீக்குச்சியார்..


"அது ஒண்ணுமில்ல சார். நீங்க அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறதா சொன்னதக் கேட்டு அதிர்ச்சியில ஒரு பத்திரிக்கைகாரர் மயங்கி வுழுந்துட்டார்….!" கூட்டத்திலிருந்து ஒரு குரல்…!


"பாத்தீங்களா தமிழ் மக்களே………நான் நாட்டுக்குச் சேவை செய்ய வர்றதுங்கிறதை எவ்வளவு ஆர்வமா பத்திரிக்கைக்காரங்க கூட எதிர்பார்க்கிறாங்கன்னு…?" இது தீக்குச்சியார்…


"சரி , உங்க கட்சி பேரு என்ன? " சோக கபடன் பத்திரிக்கையாளர்..


"இப்படி விசுக்குன்னு கேட்டா எப்படி? "


யோசிக்கிறார்…


"சரி… இப்போதைக்கு "நாடாளும் தேசிய திராவிட ஆரிய தீக்குச்சியார் சமத்துவ பாட்டாளி கட்சி" னு வெச்சிக்கிடுங்க…"


"நா.தே.தி.ஆ.தீ.ச.பா..க ?? ரொம்பப் பெரிசா இருக்கே கட்சிப் பேரு? மக்கள் வாயில நுழையுமா? மனசில பதியுமா ? " சாக்கீரன் புலனாய்வுப் பத்திரிக்கை நிருபர்..


"கட்சிப் பேரு வாயில நுழையணும்கிறதுக்காக "வாழைப் பழ முன்னேற்றக் கழகம்னு " வெச்சிக்கிட முடியுமா? "


இந்தப்பதிலைக் கேட்டு வீட்டுக்கு முன்னாடி நின்ன குமரன் அன் கோ கூட்டத்தின் கைதட்டலும் , விசிலும் விண்ணைப் பிளக்கிறது………அது அடங்கும் வரை காத்திருந்த தீக்குச்சியார் தொடர்கிறார்.


"எங்களுக்குன்னு ஒரு கொள்கை , கோட்பாடு இருக்கு…அதையெல்லாம் மனசுல வெச்சு ஞாபகத்துல இருக்குற தலைவர்கள் பேரு , கட்சிப் பேரு எல்லாத்தையும் கலக்கி குலுக்கிப் போட்டுத்தான் இந்த வரலாற்றுப் பேரை வெச்சிருக்கிறோம்….. அதனால இதான் கட்சிப் பேரு………இனி போகப் போறேன் ஊரு ஊரா………….வெற்றிக்கொடி நாட்டப் போறேன் மக்கள் மனசுல..."


"சரி அப்படி என்ன தான் சார் உங்க கொள்கை?" ஷகிழன் எக்ஸ்பிரஸ் நிருபர்.


இதென்னடா அடுத்த வில்லங்கம்?னு முழிக்கிறார் தீக்குச்சியார்…பக்கத்துல இருக்குற அன்னை சாமலதா சமாளிக்கிறார்.


" அதெல்லாம் வீட்ல இருக்குற பொதுக்குழு , செயற்குழு , மாமனாரு , மாமியாரு அப்புறம் "ஃம்ம்ம்" தம்பி இவுங்கள கலந்து ஆலோசிச்சி அப்புறமா சொல்லுவோம்!"


"எப்ப சொல்வீங்க? " அதே ஷகிழன் எக்ஸ்பிரஸ் நிருபர்.


"டேய்…நீ யாரு ? மாமுக காரனா? உன்ன யாரு உள்ள விட்டது? முதல்ல வெளியே போ…!" அலறுகிறார் தீக்குச்சியார்.


பயந்து போன ஷகிழன் எக்ஸ்பிரஸ் காரர் அப்போதே அப்பீட்டு ஆகிறார்..


ஒருவழியாக கொள்கை பற்றிய கேள்வியை சமாளித்த தீக்குச்சியார் அடுத்த கேள்வியை எதிர்நோக்குகிறார்..


"சரி…கட்சி ஆரம்பிக்கறதுக்கான காரணம் என்ன? " சீனியர் கபடன் நிருபர்….


"என்னய்யா கட்சி ஆரம்பிக்கிறது அண்ணா காரணம் சொன்னாரா? கும்கியார் சொன்னாரா? சுரத்குமார் சொன்னாரா? மஜயகாந்த் சொன்னாரா? இல்லை நம்ம பார்த்திக்தான் சொன்னாரா? என்னை மட்டும் ஏன்யா கேக்குறீங்க காரணம்? எல்லாம் ஆளுங்கட்சிக்காரங்க சதி…என் வீட்டுக்கு முன்னாடி இருக்குற மைல்கல்லை இடிச்சுத்தள்ளி இருக்காங்க ஆளுங்கட்சிக் காரங்க……இப்ப சொல்லிக்கிறேன் அதனால எல்லாம் நான் பயப்பட மாட்டேன்……….அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்"


"உங்க கட்சியோட எதிர்காலம்…?" அதே சீனியர் கபடன் பத்திரிக்கையாளர்…


"எங்க கட்சியோட எதிர்காலம் பிரமாதமா இருக்கு……….நெறைய பேரு வேலையில்லாம தமிழ்நாட்டுல சுத்திகிட்டு இருக்காங்க…நெறைய பேரு ஏதாச்சும் ஒரு கட்சில சேந்து கல்லா கட்டணும்கிற முடிவுல இருக்காங்க….அதனால என் கட்சிக்கு தாராளமா ஆதரவு இருக்கு…!"



"சரி இதுவரைக்கும் நீங்க என்ன மக்கள் சேவை செஞ்சிருக்கீங்க?" இது குமுரொளி நிருபர்.


"மக்கள் சேவை நிறைய செஞ்சிருக்கேன்………நற்பணி மன்றம் நடத்திட்டு வர்றேன்..அது மூலமா பேனர் அடிச்ச வகையில இதுவரைக்கும் 27 பிரஸ்காரங்க பலன் அடைஞ்ச்சிருக்காங்க……….கட் அவுட் கட்டுன வகையில 37 பேர் பலன் அடைஞ்சிருக்காங்க…தோரணம் கட்டுறதுக்கு ஏணி பண்ணின வகையில் மூணு பேர் பலன் அடைஞ்சிருக்காங்க………சினிமா போஸ்டர் ஒட்டின வகையில இதுவரைக்கும் தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கானோர் பயன் அடைஞ்சிருக்காங்க…..இன்னும் இப்படி என் சேவைகளை சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாம் இந்த தமில் மக்கலுக்கு தெரியும்…!


அட அவ்வளவு ஏன்……"நீ ஒரு முட்டாள் " சினிமாவுல வயசான பாட்டிக்கு எந்திரிச்சி சீட் கொடுத்திருக்கேன்…! அது என்ன படம் ? ம்ம் ஞாபகம் வந்திருச்சி…ஓலைகள் பிய்வதில்லை படத்துல ஹீரோயினுக்கு மாங்கா பிடுங்கித் தந்திருக்கேன்….இது போதாதா என் சேவை மனப்பான்மையை மக்கல் அறிந்து கொள்ள??


சரி , மற்ற கட்சிகளில் இருந்து உங்க கட்சியை எப்படி வேறுபடுத்தறீங்க?அப்புறம் உங்க இலக்கு என்ன? – இது கனமணி நிருபர்


"டேய்…யார்றா நீ வருமான வரித்துறை ஆளா? எத்தினி தடவ ரெய்டு பண்ணினாலும் நான் அசர மாட்டேன் …இதுக்கெல்லாம் பயந்துட மாட்டேன்"


சாமலதா தொடையை அமுக்குகிறார்…"என்னங்க…அது போன வாரம் "நீதிக்காக" படத்துல வர்ற வசனம்….இதுக்குத்தான் பிரஸ் மீட்டுக்காவது கொஞ்சம் தெளிவா வாங்கன்னு சொன்னேன் ….கேட்டாத்தானே?"


ஒருவழியாக நிலைமையைப் புரிந்து கொண்ட தீக்குச்சியார்…….


"எங்க கட்சி இளைஞர்கள் நிறைந்த கட்சி…எங்க நற்பணி மன்றத்துல நிறைய வேலை வெட்டியில்லாத இளைஞர்கள் இருக்காங்க…அவுங்களையெல்லாம் வச்சு வித்தியாசமா கட்சியை வழிநடத்தப் போறேன்………இதுவரைக்கும் யாருமே நடத்தாத புதுவிதமா இருக்கும்…ஓப்பனிங்கே பிரமாண்டமா கைதட்டல் விண்ணைப் பிளக்கும் பாருங்க….அங்க வைக்கிறோம் நாங்க பஞ்ச்சை..ஆக முற்றிலும் வித்தியாசமான கட்சி எங்க கட்சி..! 2011 ல் நான் தான் ஆட்சி அமைக்கப் போறேன்……..வெற்றி நிச்சயம்…அதுதான் என் இலக்கு….!


இலேசாக புது இயக்குநர்கள் புரட்யூசரிடம் கதை சொல்லும் பாணி வர கிறுகிறத்துப் போன நிருபர்கள் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்……….பேட்டியும் முடிவடைகிறது.


தீக்குச்சியார் கட்சி ஆரம்பித்த செய்தி தீ போல் பரவுகிறது….குமரன் மற்றும் "பொழுது போகணும்"ல கோஷ்டி பிழைப்புக்கு வழி கிடைத்த சந்தோஷத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறார்கள்……….இப்படியாக நடிகர் தீக்குச்சியார் கட்சி ஆரம்பித்த கதை நீள்கிறது…!


நேத்து வந்த தீக்குச்சியார் கூட கட்சி ஆரம்பித்து விட்டதைக் கண்டு பொங்கி எழுந்த மஜினி ரசிகர்கள் மஜினி கட்சி ஆரம்பிக்கும்வரை கஜினி முகம்மதுவாய் அவரது வீட்டுக்குப் படையெடுக்கப் போவதாய் சற்றுமுன் கிடைத்த தகவல் சொல்கிறது….!


மிக முக்கிய டிஸ்கி :


இந்த தீக்குச்சியாரின் கட்சி ஆரம்பித்த கதை எல்லாம் நடந்தது செவ்வாய் கிரகத்தில். அதனால் இந்தக் கதையில் வரும் எல்லோரும் செவ்வாய் கிரகத்தில் வசிப்பவர்களே……..அதனால் இந்தப் பூவுலகில் வாழும் எவரும் இக்கதையில் சுட்டப்படவில்லை….மற்றும் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதும் எமது நோக்கமில்லை. இந்த டிஸ்கியையும் மீறி யார் மனதையாவது இந்த வரலாற்றுப் பதிவு புண்படுத்தி இருக்குமானால் அதற்கான தாழ்மையான வருத்தங்கள்……….


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

அந்தப் போட்டி பற்றிய முழு விபரங்கள் இங்கே..!

Read more...

தமிழ் பதிவுலகமும், திரட்டிகளும் - ஒரு பார்வை.

Tuesday, June 16, 2009

இன்று பதிவுலகம் வளர்கிறது. அனைவராலும் கவனிக்கப் படுகிறது . நிறைய எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். வெகுசனப் பத்திரிக்கைகள் பல வலையுலகத்தை கூர்ந்து கவனிக்கின்றன. நேற்றைய தேர்தலில் ஈழத்துக்கு விடிவு இந்தியத் தேர்தலில் என்று புலம்பெயர் ஈழத்தமிழர்கள் நம்புவதற்கான குறிப்பிடத்தகுந்த காரணியாக பதிவுலகம் இருந்திருக்கிறதென்றால் அது பெற்றிருக்கும் வளர்ச்சியைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்துக் கொள்வோம்.


பதிவுலகத்தின் வளர்ச்சி பதிவர்களின் வளர்ச்சி…..பதிவர்களின் வளர்ச்சி….! தமிழர்களின் சிந்தனைக் களத்தின் , கருத்துக் களத்தின் வளர்ச்சி……!!! அத்தகைய கருத்துக்களத்தின் , அறிவுசார் உலகத்தின் அறிவு ஜீவிகள் தான் நாளை நவீன தமிழகத்தின் / தமிழ் இனத்தின் வடிவமைப்பாளர்கள். அதில் பதிவர்கள் , அறிஞர்கள் , சிந்தனையாளர்கள் இப்படி பல பேர் அடக்கம்.


காலம் இதுநாள் வரை வாழ்ந்த மனிதர்களுக்கு கிடைக்காத உலகளாவிய சிந்தனை பரிமாற்றம் என்ற வாய்ப்பினை இந்தத் தலைமுறைக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.எங்கோ சில கருத்தரங்குகளில் மட்டுமே பேசப்பட்ட கருத்துக்கள் கணினி உபயோகிக்கத் தெரிந்த சாமான்யனுக்கும் செல்கிறது.


அந்த வாய்ப்பை எப்படி உபயோகித்துக்கொள்வது என்பது அந்தத் தலைமுறையின் அங்கத்தினர்களாகிய நமது கையில்தான் இருக்கிறது. நமது சிந்தனைகளை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கத் தகுந்த வழிமுறைதான் திரட்டிகள்.


ஒருகாலத்தில் தமிழ் வலைப்பதிவு திரட்டிகள் எத்தனை என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழ்மணம் , தேன்கூடு இன்னும் வெகு சொற்பம். அதில் தமிழ்மணமே முன்னணியில் இருந்தது. வடிவமைப்பிலும் சரி , மாற்றங்களை விரைந்து செயல்படுத்துவதிலும் சரி தமிழ்மணம் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தது.


இன்றைக்கு தமிழ் வலையுலக திரட்டிகளை கை விரல் , கால் விரல் சேர்த்து எண்ணினாலும் பத்தாது போலிருக்கிறது. தமிழ்வெளி , சங்கமம் , திரட்டி.காம் என்று நீண்ட இந்த திரட்டிகளின் நீட்சியில் புதிய புரட்சியாக தமிழிஷ் என்ற குறியீட்டுத் திரட்டி ( Book Marking) இணைய தள தமிழ்ப் பக்கங்களில் எல்லாம் விளம்பரம் செய்து "என்ன இது?" என்று எட்டிப் பார்க்க வைத்தது. இன்று பதிவர்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையில் கணிசமான அளவை அது எட்டிப் பிடித்திருக்கிறது.


இன்று தமிழிஷ்ஷின் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டபிறகு அனேக புக்மார்க்கிங் திரட்டிகள் முளைத்திருக்கின்றன. தமிழர்ஸ்.காம் , தமிழ்10.காம் , நம்குரல்.காம் இன்ன பல திரட்டிகளூம் இன்னமும் எமக்கு அறிமுகமில்லாத அனேக திரட்டிகளும் தமிழ் வலையுலகில் பூத்துக்குலுங்குகின்றன.


நாம் வலைப்பதிவினை ஆரம்பித்த போது எப்படி வாசகர்களை அணுகுவது என்று தெரியாமல் இருந்தது. அந்தச் சூழலில் தான் தமிழ்மணம் அறிமுகமானது. தமிழ்மணம் மூலமாகத்தான் வலைப்பதிவில் இன்னமும் எழுத வேண்டும் என்ற உத்வேகம் உருவானது.



பல பாராட்டுக்கள் , பல வசவுகள் என்று நம்மைப் பற்றிய நமது கருத்துக்களைப் பற்றிய பல விமர்சனங்கள் முதன்முதலாக நம்மை வந்தடைந்தன. அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எழுத்தாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த விமர்சனத் தளம் சாமான்யனுக்கும் திறக்கப்பட்டது.


இந்தியாவில் இருந்தால் பத்திரிக்கைகளில் படித்த செய்திகளை அலசிப் பேச பல பேக்கரி பெஞ்ச்சுகள் இருந்தன. ஆனால் வெளிநாடுகளில் வாழும் எங்களைப் போன்ற தமிழர்களுக்கு ? பல சமயங்களில் வெள்ளைச் சுவர்தான் கதி…….இப்படியான சூழலில் அறிமுகமான ஓர்க்குட்டையும் , தமிழ் வலையுலகத்தையும் "சிக்கெனப் பிடித்தேன் சிவனே" என்றவாறு கவ்விப்பிடித்துக்கொண்டோம். தமிழ் வலையுலகம் நம்மை அரவணைக்க முழுக் காரணமும் தமிழ்மணமே என்று உரக்கச் சொல்வதில் தவறேதுமில்லை என்றே நினைக்கிறேன். அதற்கான நன்றியையும் சொல்லிக் கொள்கிறோம்.


அதே சமயம் , தமிழிஷ் போன்ற வலையுலக திரட்டிகள் இணையப் பத்திரிக்கைகளீல் செய்யும் விளம்பரங்கள் மூலம் தமிழ்ப் பதிவுலகத்தின் வாசகர் எண்ணிக்கையும் , பதிவர்களின் எண்ணிக்கையும் கணீசமாகாக் கூடியிருக்கிறது என்றால் அதில் மிகையில்லை.


சமீபகாலமாக திரட்டிகள் வாசகர்களை , பதிவர்களை இழுக்கும் நோக்கில் பலசலுகைகளை ( இந்த வார பதிவர் , க்ரீடம் இன்னபல இன்னபல ) அள்ளீத் தெளிக்கின்றன. வரவேற்கவேண்டிய மாற்றம் தான் .


வணிக நோக்கற்ற இத்தகைய பதிவுலக செயல்பாடுகள் நிச்சயம் வரவேற்க வேண்டியவையே. அதே சமயம் இத்தகைய செயல்பாடுகள் பதிவுலகின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்காமல் போட்டி மனப்பாங்கையும் , குழு மனப்பாங்கையும் வளர்க்குமானால் அது ஆரோக்கியமற்றது என்பது எம் கருத்து.


பொதுவாக , தமிழ் பதிவுலகில் குழு மனப்பாங்கு மிக அதிகமெனவே நினைக்கிறேன். ஒவ்வொரு குழுவிற்கும் வரும் வாசகர் எண்ணிக்கையும் குழுவல்லாத பதிவர்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம் எனவே உணர்கிறேன்.


அங்கங்கே எல்லாப் பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் இடுவதற்கும் , பதிவைப் படிக்காமலேயே சபாஷ்டா மச்சான் என்று சரடு விடுவதற்கும் சோம்பேறித் தனப் பட்டோ ,நேரமின்மையோ உள்ள பதிவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான். வாசகர் வரத்தும் சரி , பின்னூட்ட வரத்தும் சரி கொஞ்சம் கம்மிதான்.


அத்தகைய ஒவ்வொரு குழுக்களும் ஏதாவது ஒரு திரட்டியுடன் / குழுவுடன் முரண்படும் போது ஆளுக்கு ஒரு திரட்டி ஆரம்பிப்பதாக வைத்துக்கொண்டால் ஒவ்வொரு பதிவரும் ஆளுக்கொரு திரட்டி வைத்துக்கொள்ள வேண்டியது தான்.

இந்திய சனநாயகத்தில் ஆரம்பத்திலிருந்த காங்கிரஸ் கட்சி பிரிந்த போது அக்கட்சியின் சர்வாதிகாரம் ஒழிந்ததனெ பெருமைப் பட்ட பலரும் இன்றைய பிராந்தியக் கட்சிகளின் சுயநலன்களால் இந்திய ஆட்சி அலைக்கழிக்கப் படும் போது வருத்தப் படுவது போல நாளை பதிவுலகம் வருத்தப்பட வேண்டியது வரும்.



தமிழ் பதிவுலகமும் , திரட்டிகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. கோழியிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற ஆராய்ச்சிக்கு எப்படி முடிவில்லையோ அது போலவே திரட்டிகளால் பதிவர்கள் வாழ்கிறார்களா இல்லை , பதிவர்களால் திரட்டிகள் வாழ்கின்றனவா என்பதும் விடை காண முடியாத ஒரு ஆராய்ச்சியாகும். சொல்லப் போனால் பதிவர்களும் , திரட்டிகளும் இணைந்ததையே நாம் பதிவுலகம் என்று விளிக்கவியலும்.



விடைகாண முடியாத ஆராய்ச்சி என்பதையும் தாண்டி தேவையற்ற ஒரு ஆராய்ச்சியுமாகும். திரட்டிகளும் , பதிவுலகமும் ஒன்று சேர்ந்தே வளர முடியும். அதைத்தான் கடந்த பல ஆண்டுகள் நமக்கு சொல்லியிருக்கின்றன. எம்மைப் போன்ற புதிய பதிவர்களின் கருத்தாக மட்டுமின்றி , பதிவர்களாக இருந்து இன்று எழுத்தாளர்களாக மாறியிருக்கும் அனேக மூத்த பதிவர்களும் மற்ற மூத்த பதிவர்களும் அதைத்தான் வழி மொழிவார்கள் என்றே நம்புகிறோம்.


ஆகவே ,ஆரோக்கியமான சிந்தனைக் களத்தை , கருத்துக்களத்தை வடிவமைப்பதில் பதிவர்களும் , திரட்டிகளும் இணைந்தே பயணிக்க வேண்டும் என்ற அளவில் முடிக்கிறோம்.



Read more...

இன்றைய செய்திகளைக் கலக்கி ஒரு காக்டெயில்…!


ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டாராம். "ஆதி" சங்கர்தான் உடனே நினைவிற்கு வருகிறார். பண்ணாரிக் கோயிலில் இவர் தீ மிதிக்கப் போய் தீ மிதிப்பது "காட்டுமிராண்டித்தனம்" என்ற கலைஞர் என்ன சொல்வார் என்று பார்ப்போம். பெரியார் தனி மனித வழிப்பாட்டை / கடவுள் எதிர்த்தே புரட்சி செய்ய முயற்சித்தார். ஓரளவு வென்றும் காட்டினார்.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இரு விதங்களில் இந்நிகழ்வை அணுகலாம்.

ஒரு கோணம்

ஸ்டாலினின் நேர்மை – ஊருக்காக ஒரு வேடத்தை போட்டுக்கொண்டிருக்காமல் தன் நிலையை பட்டென்று உடைத்துப் போட்டது.

இன்னொன்று

பெரியாருக்குப் பின் அவரது சீடர்களும் , தோழர்களும் பகுத்தறிவென்பதை கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். பெரியாரின் நிழலில் வந்த கலைஞரோடு இந்தப் பாரம்பரியம் முடிவுறுமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

ஆக தற்போதைக்கு விமர்சகர்களுக்கு நன்றாக மெல்லக் கிடைத்த அவல். அவரவர்கள் தத்தமது நிலைக்கேற்ப வெவ்வேறு கோணங்களில் மென்று கொள்ளலாம்.!!


****


அடுத்தது , தேமுதிகவால் தான் நாங்கள் தோற்றோம் என்று தோழர் நல்லகண்ணு சொல்லியிரூக்கிறார். நேற்று வந்த தேமுதிக தமது தலைமை கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடிகிறது.

ஆனால் கம்யூனிஸ்டுகள் ஏதாவது ஒருதிராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஒருசில எம்பி , எம்.எல்.ஏ சீட்டுக்களுக்காக கொள்கைகளை அடகு வைத்ததைத் தவிர மக்களுக்கு என்ன நம்பிக்கை தந்தார்கள்?

அடுத்தவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதே நமது அவா.



****


சுற்றுலாவிற்கு சிறந்த இடம் இலங்கை என்று இந்தியா பிரச்சாரம் பண்ணப் போகிறதாம்.

ஆமாம் உலகத்திலேயே சர்வதேசமும் கூட்டுச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட முள்ளி வாய்க்கால் போன்ற கடற்கரை எங்குதான் காணக்கிடைக்கும்?

நடத்துங்கள்……….

அப்படியே அங்கங்கே மிச்சமிருக்கும் தமிழனின் இரத்தம் கலந்த நந்திக்கடலில் படகுப் போக்குவரத்தும் ஏற்படுத்துங்கள். உங்கள் ஆதிக்க வெறியின் மிச்சத்தை ஒவ்வொரு படகும் சொல்லிக்கொண்டிருக்கட்டும்.


****


பாஜக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி ராஜினாமாவாம். ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது பாஜகவில் வெடிக்கத் துவங்கியிருக்கிறது.

ஜஸ்வந்த் சிங் , முரளி மனோகர் ஜோஷி , ஷெகாவத் , யஷ்வந்த் சின்கா என்று பட்டியல் நீளுகிறது. பாரதிய ஜனதாவும் இன்னொரு ஜனதா தளம் ஆகப் போகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. நூறு ஆண்டுகள் ஆனாலும் அங்கங்கே அவ்வப்போது பிரிவுகள் நடந்தாலும் இன்னமும் உயிரோடிருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய பிரமிப்புதான் மிஞ்சுகிறது.

அத்வானி மக்களால் மட்டுமல்ல , கட்சிக்காரர்களாலும் கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாஜ்பாய் போன்ற இன்னொரு தலைவரை கட்சி சீக்கிரம் கண்டுகொள்ள வில்லையென்றால் இன்னொரு ஜனதா தளமாக அங்கங்கே பிரிந்து சிறு சிறு பிராந்தியக் கட்சிகளாக மாறி விடும் அபாயமிருக்கிறது.

அது நாட்டுக்கும் நல்லதல்ல , அக்கட்சிக்கும் நல்லதல்ல. ஒரு கட்சியே பெரிய கட்சி , வலுவான எதிர்க்கட்சி இல்லையென்றால் ஆரோக்கிய சனநாயகத்துக்கு வழியிருக்காது.

ஏற்கெனவே ஆரோக்கிய சனநாயகம் இருந்து கிழிச்சதா என்று நீங்க கேட்கும் கேள்வி என் காதில் விழவில்லை என்பதால் மீ த எஸ்கேப்பு.



Read more...

எச்சரிக்கை இது ஒரு சுயவிளம்பரப் பதிவு…….!!!!!

Monday, June 15, 2009


அப்படி என்னடா சுய விளம்பரம் வேண்டிக்கிடக்குன்னு எட்டிப்பார்க்கலாம்னு வந்தீகங்களா?


வாங்க ….வாங்க….விதி யாரை விட்டது?



கிட்டத்தட்ட இரண்டு வார காலம் பதிவெழுதுவதற்கு விடுமுறை விட்டாகி விட்டது. இதனால் தேசத்திற்கும் , பதிவுலகத்திற்கும் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பு ஒருபுறமிருக்க - என் பதிவுகளை படிக்கவியலாமல் இரவுத் தூக்கம் வரவில்லையென்று புலம்பித் தள்ளி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி…. தொலைபேசி……குறுஞ்செய்தி அனுப்பி……..யாஹூ அரட்டையில் வேண்டுகோள் விடுத்த (யெப்பா போதும்பா , நமக்கு தொடர்ச்சியா பொய் சொல்ல வராது….ஒத்துக்கிடுறேன்) பதிவுலகத்தையும் வலைப்பூவையும் இதுவரை கண்டறிந்திராத , படித்திராத என் இணையில்லா நண்ப , வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். ( யெம்மா பெரிய வாக்கியம் என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டாம்…புள்ளி வைக்க வேண்டிய இடத்தில "கமா" போட்டுருக்கேன் , அவ்ளோ தான்…)



உங்கள் தேவையே எமது சேவை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க….(இது திருவள்ளுவர் அல்ல , எங்க பக்கத்து வீட்டு பொட்டிக்கடைக் கார வள்ளுவருங்கோ……) உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் முகமாக


"இதோ வந்துட்டேன்……!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!."

(
ப்ரண்ட்ஸ் திரைப்பட மதன்பாப் ஸ்டைலில் படிக்க வேண்டாம்….).



பொதுவாவே நான் கொஞ்சம் ஜாலியான ஆளு. நம்மள சுத்தி இருக்கறவங்க எப்பவும் சிரிக்கணும்னு ஆசைப்படுவேன். அதுக்காக அப்பப்ப ஒன்னு ரெண்டு பிட்டப் போட்டு குபீர்னு கூட்டத்தை சிரிக்க வச்சுப் புடுவேன்……


"ஓடியம்" கேள்விப்பட்டிருக்கீங்களா?


எங்கூருப் பக்கம் என்ன மாதிரி ஆளுங்களை நல்லா ஓடியம் பேசப் பழகிட்டான்னு சொல்லுவாங்க. அப்படித்தான் என்ன எங்கூருல எப்பவுமே தெரியும்….ரொம்ப சீரியஸ்ஸா எதையுமே அணுக மாட்டேன்.


சரியா?


அப்படி நம்ம கூட எப்பவுமே சிரிக்க சிரிக்க பழகுனதுல ஒருத்தந்தேன் ரஞ்சித்து. இப்ப ஆசுதிரேலியாவில இருக்காப்பல.

ஆசுதிரேலியாவுல நம்மாளுங்கள பாத்தாத்தான் அடிக்கறாங்களாமாவா , அதான் என்ன சேதின்னு கேட்டுப் போடலாம்னு தொலை பேசினேன்.


அதையும் , இதையும் பேசிப் போட்டு கடைசியில மேட்டரு நம்ம வலைப்பூ பத்தி வந்துச்சி….


"மாப்ளே…..இப்பல்லாம் ஆளே மாறிட்டியாடா ? மொதல்ல எல்லாம் எந்நேரமும் ஓடியம் பேசிட்டே ஜாலியா திரிவே….உன் பதிவ பார்த்தா ஒரே இரத்தக்களரியா ரொம்ப சீரியஸ்ஸா இரூக்கு" அப்படீன்னான்……


எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சி…..பதிவையும் , என் இயல்பையும் ஏன் சம்பந்தப் படுத்துறான்னு….


"இல்லடா , அப்படி , இப்பிடின்னு" எதையோ பேசிட்டு போனை வச்சேன்…….


அப்பாலிக்கா , நான் எழுதுன பதிவு அத்துனையும் ஒரு ரவுண்டு பார்த்தா…"அட ஆமாம்.."னு தோணுச்சி.


என் கூட நெருங்கிப் பழகுன ஒரு நண்பனால கூட என்னை இப்போ என் பதிவின் மூலமாத்தான் அடையாளப் படுத்த முடியுதுன்னா என் மூகம் பார்த்தறியாத மற்ற நண்பர்கள் , பதிவர்கள் இவர்கள் மனசுல என்னைப் பற்றிய பிம்பம் எப்படிப் பதிஞ்சிருக்கும் என்ற நினைப்போடையே ஏதாச்சும் என் வழக்கமான பாணியில் (நிஜ) எழுத முயற்சி செஞ்சேன்.


ஆனா , நேத்துல இருந்து இன்னி வரைக்கும் எதை எழுத நினைச்சாலும் கை நீழலை…..வாக்கியம் வளரலை…சொற்றொடர் வரலை ( அப்படிக்கா போட்டுக்குங்கோ….)…


யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ஞ்சது தான் மிச்சம்….


சரி ….அப்படி யோசித்ததையே ஒரு பதிவா போட்டா என்னன்னு என் மூளைக்கு வந்த உத்தரவின் பேரிலேயே இந்த சுயவிளம்பரப் பதிவு…



அன்பு பதிவுலக நண்பர்களே….


நீங்கள் எப்படி ?


உங்கள் பதிவிற்கும் உங்கள் இயல்பான குணத்திற்கும் இடைவெளி இருக்கா?????? இல்லை இல்லையா?


Read more...

மதங்கள் தரும் நம்பிக்கைகள்....

Saturday, June 6, 2009

1. யாரோ ஒரு சமுதாயம்தான் கடவுளை தொட அனுமதிக்கப்பட்டவர்கள்....

2. தீ மிதிச்சா கடவுள் அருள் பாலிப்பார்...

3. உண்டியல்ல லஞ்சம் போட்டா கடவுள் நமக்கு ஸ்பெஷல் கவனம் செலுத்துவார்.....

4. இன்ன டிரெஸ் போட்டுட்டு வந்தாதான் கடவுள் கோவிச்சுக்க மாட்டார்.....

5. ஆளக்கொன்னா குத்தம்...ஆட்டகொன்னா குத்தமில்லே....

6. ரோட்டுல போனாக்க முள் குத்தினா , சகுனம் செரியில்லே...

7. ஒருவனுக்கு ஒருத்தி...அந்த ரூல்ஸ் ஆண்டவனுக்கு பொருந்தாது....

8. நாகரீகத்தை மதிப்போம்...அரைநிர்வாண சாமிகளையும் மதிப்போம்.....

9. சொந்த முயற்சியில் அடையாத வெற்றியை கல்கி சாமியார் செய்து கொடுப்பார்...

10. கடவுளைத் தொழு....ஆனால் உன் கடவுளை மட்டும் தொழு....

11. உன் கடவுளை எதிர்ப்பவன் மனித இன விரோதி.....

12. ரோட்டில் பசிக்காக பிச்சையெடுப்பவன் பைத்தியக்காரன்....பசிக்கு சோறிடாமல் முக்குக்கு முக்கு கோயில் கட்டு....புண்ணியம் கிடைக்கும்..

13.கோயிலில் புலால் உண்ணாதே , கஞ்சா குடி......

14.உன் சாமியின் கோயிலைக்கட்டு.....அடுத்தவன் சாமியின் கோயிலை இடி..

15.ஆயிரம் வருசம் வாழும் பாபாவும் உண்டு.....அஞ்சு நாளே வாழும் குழந்தையும் உண்டு...அது அவனவன் செய்த பாவத்தை பொருத்தது.....அஞ்சு வயசுக்குழந்தை நடுராத்திரியில் அழுது அம்மாவின் தூக்கத்தை கெடுத்தது பாவம்தானே??

16.குலத்தொழிலை செய்யாதவன் மகா பாவி.....

17.அரசியல்ல பிரச்சினையா....ராம்ராம் சொல்லி ரத யாத்திரை நடத்து........ ஆண்டவன் அருளுவார்....

18.சமயத்தில் ஆண்டவன் கடலுக்கு கீழேயும் பாலம் கட்டுவார்....

19.ஆதாமையும் , ஏவாளையும் ஆண்டவன் படைத்தார்......(பட்டாம்பூச்சிகளை மனிதனா படைத்தான்?)

20.வானுயர்ந்த கோபுரம் கட்டு...அதற்குமேல் மக்கள் குடியிருக்க மாடிகளை கட்டாதே ( மதுரை..)

21.கங்கையில் குளித்தால் பாவம் தீரும்........( பாவம் பண்ணிவிட்டு கங்கை நோக்கிச்செல்..)

22. மகாமகத்தில் குளித்தால் பாவங்கள் தீரும் ......( சமயத்தில் மக்களே தீருவார்கள்......)

23. ஆசையை விடு ..புத்தர்...( ஆனால் ஆளும் ஆசைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை...சிங்களம்..)

24. எல்லா வியாதிகளையும் பரிசுத்த ஆவி குணப்படுத்தும்...( போதகரின் மகன் மருத்துவமனையில்..)

25. ஆட்டைக்கொல்லலாம்.....ஆனால் மாட்டைக்கொல்லாதே மகாபாவம்...

குறிப்பு : இது ஒரு மீள்பதிவு.!

Read more...

ஒரு சந்தேகம்: நெருப்புநரியில் பின்னூட்டம் இடுவது பற்றி.!

Friday, June 5, 2009

நண்பர்களுக்கு,

பலருக்கு காலை வணக்கம் , இன்னும் பலருக்கு இரவு வணக்கம்.

தற்போது பதிவர்களில் பலதரப்பினருக்கும் நெருப்பு நரி ( FIREFOX) ஓரளவிற்கு எல்லோருக்கும் பழகிய இணைய உலாவிதான்.

add ons , tab browsing என்று பலவித சிறப்பம்சங்களினால் நானும் இந்த நெருப்பு நரியே கதி என்று கிடக்கிறேன். ஆனால் இந்த உலாவியில் சில வலைப்பூக்களுக்கு பின்னூட்டம் இடும் போது வரும் பிரச்சினையைப் பற்றிய சந்தேகமே இந்தப் பதிவு.

சமீப காலமாக இடுகையின் கீழேயே பின்னூட்டப் பெட்டி இருப்பது ப்ளாக்கர் பதிவர்களிடையே பிரபலமாகி வருகிறது. வேர்ட்ப்ரஸ் போன்ற தளங்களில் இது மிக எளிதாக இருந்தாலும் , ப்ளாக்கரில் கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையாகவே இருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்லப் போனால் "Embedded Comment Box Below Post". இன்னும் உதாரணம் சொல்லப் போனால் எனது அன்பு நண்பர் பதியின் ஒரு வலை இடுகை .....


http://pathipakkam.blogspot.com/2009/06/blog-post_05.html


இந்தக் குறிப்பிட்ட பின்னூட்டப் பெட்டியில் நெருப்பு நரியின் ஊடாக பின்னூட்டம் இடும் போது , அந்தப் பின்னூட்டம் ரிலிஸாவதும் இல்லை , பின்னூட்டம் இட்டதற்கான அத்தாட்சியும் இல்லை.

நிறைய முறை முயற்சித்தேன். அதே சமயம் ஐ.ஈ யில் இந்தப் பிரச்சினை இல்லை ( Internet Explorer ).

இந்தப் பிரச்சினை எனக்கு ஒரு மாத காலமாகவே இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா ? இருந்தால் அதைச் சரி செய்ய வழியேதும் உண்டா ?

இன்னொன்று , பின்னூட்டங்களை தனிப் பக்கத்த்தில் இடும்போதோ (FULL PAGE), இல்லை தனி சன்னலில் ( POP UP WINDOW) இடும்போதோ பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. அதனால் தொடர்ச்சியான பின்னூட்ட விவாதங்களை நிகழ்த்தும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இந்த EMBEDDED BELOW COMMENTS ல் அந்த வாய்ப்பு இருக்கிறதா? இருந்தால் எப்படி உபயோகித்துக்கொள்வது?????

தெரிந்தால் கொஞ்சம் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நண்பர்களே.

உங்கள் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.....

Read more...

தியானென்மென் படுகொலை – கொலையிசமான கம்யூனிசம்.

Wednesday, June 3, 2009

கம்யூனிசம் மக்களுக்கானது , தொழிலாளர்களுக்கானது , மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்றெல்லாம் போதித்து போதித்து வளர்ந்த சீன மக்கள் மேற்குலகத்தின் அபார வளர்ச்சியில் மயங்கிப் போயிருந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதி.


 

எந்தத் தொழிலாளர்களின் குரலாக ஒலிக்கும் என்ற நம்பிக்கையில் கம்யூனிசத்தை ஆட்சியாளர்கள் வளர்த்தெடுத்தார்களோ அதே கம்யூனிசக் கட்சி சர்வாதிகாரக்கட்சியாக மாறி இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தியது. எந்தச் சர்வாதிகாரத்தையும் , முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடி உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த கம்யூனிசக் கட்சி தானே ஒரு பெருமுதலாளியாகக் காட்சி தந்தது. இன்றும் கூட என்பது கிளைக்கதை.


 

சர்வாதிகாரத்தையும் , ஒரு கட்சியின் அதிகார வரம்பிற்குள் உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்த நாடு அடிமையாய்க் கிடக்கும் நிலைகண்டு வெதும்பிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை தங்களது கையில் எடுத்திருந்தார்கள்.


 


 

ஜூன் 4 , 1989.


 


 

அந்த நாள் எப்போதும் போலவே விடிந்தது. எப்போதும் போலவே உலகம் சுழன்று கொண்டிருந்தது. உலகின் பாதி மக்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த நாளின் சூரியன் மறையும் போது கடந்த நூற்றாண்டின் கறுப்பு நாளாக வரலாறு பதிவு செய்துவிட்டுப் போனது.


 

ஆம் , அப்படித்தான் சொல்லியாக வேண்டும். வேறு எப்படித்தான் சொல்வது?


 


 

எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரத்தின் தியானென்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பெய்டா எனப்படும் பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்கள் குழுமியிருந்தார்கள். ஜனநாயகமே எங்களுக்கு வேண்டும் , கம்யூனிசம் என்கிற பெயரில் நடக்கும் சர்வாதிகாரம் எங்களுக்கு வேண்டாம் என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.


 

உரிமைகளைப் பெற்றுத் தரவந்த கம்யூனிசக் கட்சி என்ன செய்தது தெரியுமா?


 

இராணுவத்தை அனுப்பி அணியணியாக இளைஞர்களைக் கொன்று குவித்தது. கம்யூனிசம் என்ற பெயரில் நீர்த்துப் போன தத்துவங்களைக் கொண்டு சர்வாதிகார ஆட்சி புரிந்த சீனக்கம்யூனிசக் கட்சியின் சர்வாதிகாரத்தையும் அதன் தலைவர் டெங் ஜியோபோங்க் கையும் எதிர்த்து புரிந்த ஆர்ப்பாட்டக்காரரகளை டாங்கிப் படையினை வரவழைத்த்து நிராயுதபாணியாக நின்ற மாணவர்களைக் கொன்று தள்ளியது.


 

இன்றைய நாள் வரை , இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எத்துணை பேர் என்ற கணக்குக்கூட தெரியவில்லை. அதற்குப் பின் அங்கங்கே ஜனநாயகத்திற்கான முணுமுணுப்பு அங்கங்கே இருந்தாலும் பெரிதாக குரல் ஒன்றும் எழவில்லை. காரணம் எழுப்புவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பில்லை.


 

கம்யூனிசம் என்ற உயரிய தத்துவத்தையும் அச்சம்பவத்தினால் கொச்சைப்படுத்தியது. அந்தச் செயல் மூலம் கம்யூனிசம் கொலையிசமாக தனது கோரப்பற்களை விரித்துக்காட்டியது.


 

அந்த பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களும் கூட தமிழர்களைப் போலவே உலகால் கைவிடப்பட்டவர்கள். அன்று தியானென்மென் படுகொலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பிணக்கணக்கையும் யாரும் பார்த்திருக்கவில்லை. இன்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணக்கணக்கும் இந்த உலகிற்கு தேவைப்பட்டிருக்கவில்லை.


 

உலகின் எந்தவொரு மூலையிலும் எழும் உரிமைக்கான குரலை வளர்த்தெடுக்க வேண்டிய கம்யூனிசம் இன்று கூட என்ன செய்து கொண்டிருக்கிறது? சீனா , க்யூபா, ரஷ்யா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளை எதிர்த்து சிங்கள அரசின் கொடுங்கோலாச்சிக்கு துணை போகின்றன. எந்தத் தத்துவத்தில் அடிப்படையில்?. ஒருவேளை , தத்தமது சுயநலன்களுக்காக என்றால் என்ன எழவுக்கு நாங்கள் கம்யூனிச நாடுகள் என்று வேடம் போட்டுக்கொண்டிருக்கின்றன?


 

நான் வலதுசாரி , இடதுசாரி என்று கொள்கைகளைப் பேசுபவன் அல்ல. பேசுமளவிற்கு கம்யூனிசத்தைப் படித்தவனும் அல்ல. என்னளவில் என் கண் முன் தெரிந்த அனைத்து கம்யூனிச நாடுகளும் சரியான உதாரணங்களாக இல்லை.


 

வடகொரியா , சீனா , க்யூபா என்று இப்படியாக நீளும் பட்டியல்களில் எல்லாம் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம் என்றே கருதுவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன.


 

உலகளாவிய முறையில் பொருளாரதார தாராளமயமும் , முதலாளித்துவமும் வீழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் அதற்கு மாற்றாக ஏதோவொரு இசம் தேவை . அது முற்றிலுமான முதலாளித்துவமாகவும் இருக்க முடியாது , சர்வாதிகார கம்யூனிசமாகவும் இருக்க முடியாது.


 

நாளை ஜூன் 4 ,


 

தியாயனெமென் சதுக்கப் படுகொலை நடந்த நாள்.
அந்நாளில் சனநாயகத்துக்கு குரல் கொடுத்து மடிந்து போன பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் நமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்வோம்.


 

Read more...

இயந்திர வாழ்க்கையின் ரணப் பொழுதுகள்….!

Monday, June 1, 2009

ஓடி , ஒளிந்து , குதித்து
ஓணான் அடித்து மகிழ்ந்த இளமைக்குறும்புகள்…

கற்றாழை முட்டியைக் கட்டிக்கொண்டு
உற்றாருக்கு தெரியாமல் நீந்திய வேளைகள்…

எட்டணாவிற்கு விற்கும் மாம்பழத் துண்டுகளுக்காக
எட்டாத உயரச்சட்டியில் திருடிய சில்லறைகள்…

அடித்த வாத்தியாரின் சைக்கிள் டுயூப்பில்
பிடுங்கிய காற்றிற்காய் வாங்கிய பிரம்படிகள்…

ஒற்றை ரூபாய் குச்சி ஐஸிற்காக கருதடித்த
ஓய்வில்லா அறுவடைக் காலங்கள்….

அச்சுமிட்டாய்க்காக அடம்பிடித்த அழுகைகள்…

திருவிழாவின் பொழுதுகளில் விடியவிடிய
தெருவெங்கும் விளையாடிய கணங்கள்…

அடித்த கில்லி பட்டு இன்றைக்கும் இருக்கும்
அம்மாயிப்பாட்டியின் தழும்பு…..

தவறி விழுந்த பருத்திக்காட்டில் கொத்திய
குளவிகள் என் முகத்தை கோரப்படுத்திய வேதனை..

உயர்நிலைப் படிப்புக்காய் நடக்கும்போது ஓய்வுக்கு
உதவிய பெயிண்ட் போன மைற்கற்கள்….

முதன் முதலில் நான் ஏதோ கிறுக்கியதற்காக
வகுப்பறையில் பாராட்டிய என் தமிழ் அய்யா…

கல்லூரியின் முதல் நாளில் பால்குடி மாறலை என்று
என்னைக் கிண்டலடித்த புரபசர் ஜோஷி…

முதன்முதலில் என் உதடுகளைத் தழுவிய
மறைந்து மறைந்து பிடித்த பீடித்துண்டு….

இன்னமும் நினைவிருக்கும் முதலாவது
மதுவின் வாசனையும் , சுவையும்….

படிக்கிற போர்வையில் புத்தகத்தின் உள்ளே
வைத்துப் படித்த குமுதம் , கல்கண்டு….

பேருந்துக் கட்டணத்தை மிச்சம் பிடித்து வாங்கிய
அந்நாளைய ராஜேஷ்குமாரும் , பிகேபி….

குழுப்படிப்பு என்ற போர்வையில் ஹாஸ்டலில்
படித்த சரோஜாதேவிப் புத்தகத்தின் வக்கிர எச்சங்கள்…

பேருந்தில் இடம்பிடிக்க மட்டுமே உதவிய
பெரிய சைஸ் கல்லூரிப் புத்தகங்கள்….

உழைத்துக் களைத்து வீடு திரும்பிய
அப்பாவின் வியர்வை வாசனை…

ஒலியும் , ஒளியும் பார்க்க ஒண்டிக்கொண்ட
அண்டை வீட்டுத் திண்ணைகள்…..

இப்படியாக , இளமையின்
இனிய நினைவுகளைக் கிளறிப் போகின்றன

இயந்திர வாழ்க்கையின் ரணப் பொழுதுகள்….!

Read more...

ஈழத்தமிழின அழிவிற்கு இந்தியா பொறுப்பு - இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி.

இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் கடந்த மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா குற்றம் சுமத்தியுள்ளார்.


இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிலைகொண்டிருந்த போது அதன் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா இலங்கையின் இந்த யுத்தத்தில் இந்தியா பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியா பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதில் தோல்வி கண்டுள்ளதாக இரண்டு சர்வதேச மனித உரிமை குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே இந்தியா இந்த விடயத்தில் நடத்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 60 மில்லியன் தமிழர்களை புறக்கணித்து இலங்கைக்கு இராணுவ தளபாடங்களும் பயிற்சிகளும் புலனாய்வு ஊக்குவிப்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன.

அத்துடன், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஈடாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா இலங்கைக்கு ஆயுத விற்பனையை கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வந்ததாகவும் மேத்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்த முழுமையான டைம்ஸ் நாளிதழ் செய்தி பின்வருமாறு.

India accused of complicity in deaths of Sri Lankan Tamil Tigers


Jeremy Page, South Asia Correspondent

India was accused yesterday of complicity in the killing of an estimated 20,000 civilians in the last stages of Sri Lanka’s 26-year war against the Tamil Tigers.

Major-General Ashok Mehta, a former commander of Indian peacekeeping forces in Sri Lanka, said that India’s role was “distressing and disturbing”. Two international human rights groups said that India had failed to do enough to protect civilian lives.

“We were complicit in this last phase of the offensive when a great number of civilians were killed,” General Mehta, who is now retired, told The Times. “Having taken a decision to go along with the campaign, we went along with it all the way and ignored what was happening on the ground.”

Despite being home to 60 million Tamils, India has provided Sri Lanka with military equipment, training and intelligence over the past three years, diplomatic sources told The Times. More controversially, it provided unwavering diplomatic support and failed to use its influence to negotiate a ceasefire for civilians to escape the front line, they said.

India joined a bloc led by China and Russia at a special session of the UN Human Rights Council last week to thwart a proposal for a war crimes inquiry, and instead supported a resolution praising Sri Lanka. In January India voted in favour of a war crimes inquiry into Israel’s operation in the Gaza Strip, which killed an estimated 926 civilians.

General Mehta said that the Indian Government, led by the Congress Party, wanted to counterbalance China and Pakistan, its main regional rivals, which had each increased arms sales to Sri Lanka in the past few years. It also wanted to avenge the Tigers’ assassination in 1991 of Rajiv Gandhi, the Prime Minister and late husband of Sonia Gandhi, the current Congress leader, he said.

Brad Adams, Asia director of Human Rights Watch, said that neither reason justified failing to act when the Red Cross warned of an “unimaginable humanitarian catastrophe”. India “could have saved many lives if it had taken a proactive position — and it would not have affected the outcome of the war,” he said.

Sam Zarifi, Asia Pacific director of Amnesty International, said: “India . . . simply chose to support the [Sri Lankan] Government’s notion that it could kill as many civilians as it would take to defeat the Tigers.”

India says that it provided Sri Lanka with non-lethal military equipment and sent officials repeatedly to persuade the Government to protect civilians. “We’ve consistently taken the line that the Sri Lankan Government should prevent civilian casualties,” a Foreign Ministry spokesman said.

However, President Rajapaksa of Sri Lanka told NDTV: “I don’t think I got any pressure from them. They knew that I’m fighting their war.”

Mr Rajapaksa told The Week magazine that he planned to visit Delhi next month to thank Indian leaders. “India’s moral support during the war was most important,” he said.

Diplomats, human rights activists and analysts say that Delhi either did not use its full diplomatic force or, more likely, gave Colombo carte blanche to finish the war. India’s only real concerns, they said, were that the conflict should not create a flood of refugees to India. Some raised questions about Vijay Nambiar, a former Indian diplomat, who is chief of staff to Ban Ki Moon, the UN Secretary-General. The Times revealed last week that Mr Nambiar knew about but chose not to make public the UN’s estimate that 20,000 civilians had been killed, mostly by army shelling.

Times Online


போதுமா நண்பர்களே இந்தியாவின் ஈழம் ஒட்டிய செயல்களுக்கு கிடைத்த இன்னொரு நற்சான் றிதழ்?

சொன்னவர் ஒரு இந்திய இராணுவ அதிகாரி என்றாலும் இந்தக் கட்டுரையின் மூலம் இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் வெள்ளைத் தோல் காரர்கள். வழக்கமாக வெள்ளைத் தோலை மதித்து வணங்கும் இந்திய ஆளும் வர்க்கம் இதற்காவது பதில் சொல்வார்களா ?

வெள்ளைத் தோல்காரர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் செய்கிறார்கள் என்று அலறித் துடித்த இந்திய ஆளும் வர்க்கம் இதற்கு பதில் சொல்வார்களா?


இல்லை வழக்கம் போல கள்ள மெளனம்தானா?

Read more...

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP